Friday, September 19, 2008

இந்திய வங்கிகள் நிதி நிலை வலுவாக உள்ளது! – ப.சிதம்பரம்


 புதுடெல்லி: இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி இருப்பு  நிலைமை வலுவாக இருப்பதால் யாரும் கவலைப்பட தேவையில்லை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பிரபலமான லேஹ்மன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலாகி விட்டது. இதனால், இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தப்ரோதைய விவகாரங்களை ஆராய மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:

லேஹ்மன் பிரதர்ஸ் திவாலானதால் இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வலுவாகவும் ஸ்திரமாகவும் உள்ளன. லேஹ்மன் பிரதர்ஸ் நிறுவனம் பற்றிய தகவல்களை ரிசர்வ் வங்கி கவர்னரும், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரும் எனக்கு தெரிவித்துள்ளனர்.

அதன்படி மத்திய அரசின் நிதி நிறுவனங்களோ அல்லது வங்கிகளோ அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. இந்திய வங்கிகளின் இருப்பு நிலை நல்ல முறையில் உள்ளது.

ஆயிரம் கோடி ஸ்காலர்ஷிப்

 கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் படிக்கும்  மாணவர்களுக்காக 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஸ்காலர்ஷிப் வழங்க மந்திரி சபை ப்புதல் அளித்துள்ளது.

எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்காக 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ.1,260 கோடியே 80 லட்சத்துக்கு ஸ்காலர்ஷிப் திட்டம் தொடங்கப்படுகிறது. இதனால் 5 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பலனடைவார்கள்.

எச்.எம்.டி. (வாட்ச்) லிமிட், இந்துஸ்தான் கேபிள் லிட், பாரத் வேகான் என்ஜீனியரிங் கம்பெனி லிட் போன்ற நட்டத்தில் இயங்கும் 10 பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூ.79 கோடியே 70 லட்சம் அளிக்கப்படும், என்றார் சிதம்பரம்.

மந்திரி சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இதர முடிவுகள் குறித்து அமைச்சர் ப்ரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியிருப்பதாவது:  

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பாக மொகாலி நகரில் `நானோ அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்' அமைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. 11- வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ.142 கோடியே 45 லட்சம் செலவில் இந்த நிறுவனம் அமைக்கப்படும்.

பாசுமதி அரிசி போன்ற முக்கிய விளைபொருட்கள் மற்றும் இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமையை பாதுகாக்கவும் உணவு தயாரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 இந்தியா-மாலத்தீவு இடையே விமானங்களை இயக்குவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், பிரான்சில் பணிபுரியும் இந்தியர்களின் நலனுக்காக அந்த நாட்டுடன் செய்து கொண்ட சமூக பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது, என்றார் தாஸ்முன்ஷி

 

Thursday, September 18, 2008

லேமன் பிரதர்ஸ் விவகாரம்: ஐ.சி.ஐ.சி.ஐ.க்கு எந்த பாதிப்பும் இல்லையாம்!

சென்னை: லேஹ்மன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து அதில் முதலீடு செய்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை

அவ் வங்கியின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி சந்தா கோச்சார் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூன் 3, 2008 அன்றைய நிலவரப்படி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் மொத்த சொத்து மதிப்பு ரூ.4, 84, 643 கோடி ரூபாய்.

அதேபோல ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி - யுகே பிஎல்சியின் (ஐசிஐசிஐயின் பிரிட்டன் கிளை) சொத்து மதிப்பு அன்றைய தேதியில் 8.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பிஎல்சிதான் 57 மில்லியன் யூரோ (தோராயமாக 80 மில்லியன் டாலர்) அளவுக்கு முதலீடு செய்துள்ளது. இது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி யுகே பிஎல்சியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் குறைவு மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 0.1 சதவீதத்திற்கும் குறைவாகும்.

இந்த பத்திரங்களுக்கு எதிரான முதலீட்டில் 12 மில்லியன் டாலருக்கு நிகரான ஒதுக்கீட்டை (ரூ.54 கோடி) ஐ.சி.ஐ.சி.ஐ. யுகே பிஎல்சி ஏற்கனவே பெற்று விட்டது.

மேலும் 50 சதவீத திரும்பப் பெறும் வாய்ப்பை கணக்கிட்டால் தேவைப்படும் கூடுதல் ஒதுக்கீடு என்பது 28 மில்லியன் டாலராக மட்டுமே இருக்கும்.

எனவே லேஹ்மன் பிரதர்ஸ் முதலீட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி யுகே பிஎல்சிக்கோ வேறு எந்த பாதிப்பும் இல்லை.

இதை முதலீட்டாளர்களும், வாடிக்கையாளர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், என அவர் கூறியிருக்கிறார்.

 

வளைகுடா முழுக்க ஒரே கரன்ஸி திட்ட வரைவுக்கு ஒப்புதல்!

வளைகுடா நாடுகள் முழுமைக்கும் இனி ஒரே விதமான நாணயத்தைப் புழக்கத்தில் விடும் திட்ட வரைவுக்கு 5 வளைகுடா நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

ஐரோப்பா கண்டம் முழுமைக்கும் இப்போது ஒரே விதமான நாணய முறை யூரோ (ஐரோப்பிய யூனியன்) எனும் பெயரில் புழக்கத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சக்தி வாய்ந்த நாணயமாக இருந்து அமெரிக்க டாலரையே மிஞ்சும் அளவுக்கு மதிப்பு மிக்க கரன்ஸியாக யூரோ மாறியிருக்கிறது.

இப்போது ஐரோப்பிய நாடுகளின் வழியில் ஆசிய கண்டம் முழுமைக்கும் ஒரே விதமான கரன்ஸியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து  வருகின்றன ஆசிய நாடுகள். ஆனால் இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால் திட்டம் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் வளைகுடா பகுதியில் உள்ள நாடுகள் முழுமைக்கும் ஒரே விதமான நாணயத்தை (single currency system) புழக்கத்தில் சில வளைகுடா நாடுகள் முயற்சி மேற்கொண்டன. 

இதனை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த்து. இதில் வளைகுடா நாடுகளின் ஐந்து முக்கிய நிதியமைச்சர்கள் பங்கேற்று, ஒரே நாணய திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

வருகிற நவம்பர் மாதம் மஸ்கட் நகரில் நடக்கவுள்ள அனைத்து வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் திட்டத்தின் முழு வடிவம் சமர்ப்பிக்கப்பட்டு, செயலாக்க நடைமுறைக்கும் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

ஜெட்டா கூட்டத்தில் பங்கேற்றபின் கத்தார் நாட்டின் நிதி அமைச்சர் யூசுப் கமால் கூறுகையில், இப்போது எந்த மாறுதலும் செய்யாமல் ஒரே நாணயத் திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம் என்றார்.

இந்த திட்டத்துக்காக 2001-ல் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் கவுன்சிலை சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ மற்றும் ஓமன் ஆகிய 6 நாடுகள் ஏற்படுத்தின. ஆனால் இதிலிருந்து கடைசி நிமிடத்தில் ஓமன் கழன்று கொள்ள, மற்ற 5 நாடுகளும் ‘கல்ஃப் யூனியன்’ என்ற கருத்தில் உறுதியாக நிற்கின்றன.

ஏஐஜிக்கு உதவி: அமெரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு!!

நியூயார்க்: லேஹ்மன் பிரதர்ஸ், மெர்ரில் லின்ஜ் வரிசையில் இன்னொரும மிகப் பெரிய சர்வதேச நிதி நிறுவனம் ஏஐஜியும் நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறது.

ஏஐஜி எனப்படும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் நிதி நிறுவனம் உலகம் முழுக்க கிளை பரப்பியுள்ள மிகப் பெரிய காப்பீட்டு நிதி அமைப்பாகும்.

இந்த அமைப்பு திரட்டியுள்ள கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்த வங்கிகள் உள்ளிட்ட பிற அமைப்புகள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற முண்டியடித்ததால், திடீரென்று நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது ஏஐஜி.

இதைச் சமாளிக்க ரூ.1,80,000 கோடி ரூபாயைத் திரட்ட முயன்றது ஏஐஜி. ஆனால் எந்த வங்கியும் நிதி உதவி வழங்க முன் வரவில்லை. இந்நிலையில் ஏஐஜியும் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஏற்கெனவே லேஹ்மன் பிரதர்ஸ், மெர்ரில் லின்ஜ் சரிவால் திண்டாடிப் போயுள்ள அமெரிக்க மற்றும் அதன் சார்புடைய நாடுகளின் பொருளாதாரம், இந்த சரிவாயும் தாங்க முடியாது என்பதால், இப்போது அமெரிக்க அரசே ஏஐஜிக்கு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி செய்து சரிவிலிருந்து காப்பாற்றியுள்ளது.

மக்கள் எதிர்ப்பு!

ஆனால் இந்த முடிவுக்கு அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.

அமெரிக்க அரசு மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு, ஊதாரித்தனமான காரியங்களிலும், தவறான முதலீடுகளிலும் பணத்தைக் கோட்டை விட்ட நிறுவனங்களைக் காப்பாற்றுவதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் இந்த எதிர்ப்புக்காக, ஏஐஜியை அம்போவென விட்டுவிட முடியாத நிலை அமெரிக்க நிதித் துறைக்கு.

இப்போது இந்த நிறுவனம் ஒருவேளை மூழ்கிவிட்டால், இதில் தங்கள் காப்பீடு செய்துள்ள சர்வதேச நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளின் மதிப்பைக் குறைத்து மறுமதிப்பீடு செய்ய வேண்டி வரும்.

அப்படியொரு சூழல் வந்தால் உலகப் பொருளாதாரமே தடுமாறிவிடும். பெருமந்தம் போன்றதொரு சூழல் மீண்டும் வந்தாலும் வியப்பதற்கில்லை என அஞ்சுகின்றனர் அமெரிக்க நிதித்துறை அதிகாரிகள்.

இது ஒரு நச்சு சுழல் மாதிரிதான். ஏஐஜிக்கு ஏற்படும் பெரும் இழப்பு, உலக நிறுவனங்களின் முதலீடுகளை அதல பாதாளத்துக்குத் தள்ளிவிடும். இதைத் தவிர்க்கத்தான் இப்போது அமெரிக்கா அரசு உதவிக் கரம் நீட்டியுள்ளது. மற்றபடி ஏஐஜியின் முதலீடுகள் எந த அளவு மோசமானவை என்பது அரசுக்கும் தெரியும், என்கிறார் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக பேராசிரியர் ரெய்ன்ஹார்ட்.

என்னதான் சமாதானம் சொன்னாலும், அமெரிக்க அரசின் இந்த உதவி அரசியல் ரீதியாக புஷ் நிர்வாகத்துக்கு பெரும் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒழுங்குமுறை இல்லாததே காரணம்!

இப்படி ஒரு சூழல் மீண்டும் மீண்டும் தேன்றக் காரணம் நிதி நிறுவனங்களிடையே ஒழுங்குமுறையின்மைதான். ஒவ்வொரு முறையும் தனியார் நிதி நிறுவனங்கள் கடனில் சிக்கித் தவிப்பதும், அவற்றை மீட்க அரசு வருவதும் மிக மோசமான போக்கு, என்கிறார் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி.

இந்த விஷயத்தில் இன்னும் சில தினங்களில் கடுமையான பிரச்சினைகளை புஷ் நிர்வாகம் சந்திக்க உள்ளது. யார் யாரோ பட்ட கடன்களுக்கு அமெரிக்க மக்களின் பணத்தில் நிவாரணம் தரப் பார்ப்பது மிகப் பெரிய மோசடி என்கிறார் அவர்.

அதேநேரம் கடந்த வாரம் திவாலான லேஹ்மன் பிரதர்ஸ் மற்றும் அடிமாட்டு விலைக்கு கைமாறிய மெர்ரில் லின்ஜ் ஆகிய நிதி நிறுபவனங்கள் உதவி கோரியபோது கைவிரித்த புஷ் நிர்வாகம், ஏஐஜிக்கு மட்டும் உதவியிருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனாலும் இந்த உதவிக்கு ஈடாக, ஏஐஜியின் மொத்த சொத்துகளில் 80 சதவிதத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது நிதித்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

 டாடா ஏஐஜிக்கு பெரும் பின்னடைவு!

ஏஐஜி நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் இரு கூட்டு நிறுவனங்களை நடத்தி வருகிறது. தற்போதைய நெருக்கடி காரணமாக பெரும் பின்னடைவை இந்நிறுவனங்கள் சந்தித்துள்ளன.

ஏஐஜி நிதி நெருக்கடியால் அதன் இந்திய நிறுவனங்களில் காப்பீடு செய்துள்ள மக்களின் பணத்துக்கு பாதிப்புகள் வருமா என்பது குறித்து சரியான தகவல்களைத் தருமாறு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் டாடா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதால், மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல தனியார் துறை நிறுவனங்கள் காப்பீட்டில் கொடிகட்டிப் பறந்த்தும், பின்னர் திடீரென ஒருநாள் காணாமல் போனதையும் அனுபவித்துள்ள மக்கள், மீண்டும் அப்படி ஒரு மோசமான சூழல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

ஆனாலும் டாடாவின் பலமான பின்னணி இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை என டாடா ஏஐஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் சென்னைப் பிரிவு உள்பட நாடு முழுவதும் 11750 ஊழியர்கள் பணியில் உள்ளனர். மக்களிடமிருந்து பெற்ற காப்பீட்டுப் பணத்தில் 1000 மில்லியன் டாலர்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளாக வைத்துள்ளது இந்த நிறுவனம்.

ஏஐஜி வரலாறு  

மௌரீஸ் கிரீன்பெர்க் என்பவரால் உருவாக்கப்பட்ட சாம்ராஜ்யம்தான் ஏஐஜி. 2005-ல் கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக அவர் தூக்கியெறியப்படும் வரை நூற்றுக்கணக்கான நிறுவனங்களை உலகம் முழுக்க தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ஏஐஜி.

இந்த காலகட்டத்தில்தான் மோசடியான காப்பீடுகள் பலவற்றுக்கு பணம் கொடுத்து போண்டியாகும் சூழலுக்கும் தள்ளப்பட்டது. விமான நிறுவனங்கள் மோ இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் மோசடியான வீட்டுக் கடன்களுக்குக் காப்பீடு பெற்றிருந்தனர். கிரீன்பர்க் போன பிறகு ஏஐஜி தன்னை மறு சீரமைப்பு செய்வதில் முனைந்தது.

ஆனால் அதற்குள் கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டு இப்போது அமெரிக்க அரசின் தயவில் தப்பிப் பிழைத்துள்ளது.

ஏஐஜியின் இந்த வரலாறு தெரிந்ததால்தான், இந் நிறுவனத்துக்கு நிதியுதவி செய்யக்கூடாது என அமெரிக்கர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் ஒரு முறை இந் நிறுவனம் சிக்கலில் மாட்டினால், ‘அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாமல் போய்விடும்’!!  

Monday, September 8, 2008

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி!!

சென்னை: இந்தியா ஏழை நாடல்ல... ஏழையாக்கப்பட்டிருக்கும் நாடு என்பதை நிரூபிக்கும் விதத்தில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது தொண்டு நிறுவனம் ஒனறு.

அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.64 லட்சம் கோடியாம் (1456 பில்லியன் டாலர்கள்)!!

இந்தியாவுக்கு தற்போதுள்ள வெளிநாட்டுக் கடனைவிட 13 மடங்கு அதிகம் இந்தக் கறுப்பு பணத்தின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
சமுதாயத்தில் மலிந்துவிட்ட லஞ்சம் மற்றும் நேர்மையின்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் தேசத்தின் மதிப்பு மீட்பு அறக்கட்டளை (பவுண்டேஷன் பார் ரெஸ்டோரேஷன் ஆப் நேஷனல் வேல்யூஸ் -எப்.ஆர்.என்.வி.) என்ற அமைப்பை சுவாமி பூமானந்தா தொடங்கியுள்ளார்.

இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல், கல்வி ஆலோசகர் விபா பார்த்தசாரதி ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் கிளை
மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பின் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிளை நேற்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது.
பின்னர் இந்த அமைப்பின் தலைவர் சுவாமி பூமானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
உலக நாடுகளை அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும். நாட்டின் ஒழுக்க நெறிமுறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஊழலை ஒழிப்பதற்காக இந்த புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.
இதன்மூலம், ஊழலை அடிப்படையில் இருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும், ஒழுக்கநெறிமுறைகள் தொடர்பான பாடங்களை ஆரம்பக் கல்வியில் சேர்க்கவும் முயற்சி எடுக்கப்படும். இந்த அமைப்பின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 18, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
அதிர வைக்கும் கறுப்புப் பணம்!
இந்தியாவின் கறுப்புப் பணத்தை முழுமையாக வெள்ளையாக்கினாலே போதும், முழுப் பிரச்சினையும் தீர்ந்து போகும். சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மட்டும் ரூ.64 லட்சம் கோடி. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்.
அந்த பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் நாடு எங்கேயோ போய்விடும். மக்கள் மீது எந்த வரிச்சுமையும் விழாது. சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப்பெற்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும், என்றார் பூமானந்தா.

அரசியலில் துவங்கும் முதல் ஊழல்!
மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவின் முன்னாள் கமிஷனர் என்.விட்டல் கூறுகையில். நாம் நினைத்தால் ஊழலை எளிதில் ஒழிக்க முடியும். அதறஅகு முதலில் நமது தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் முதல் ஊழல் அரசியலில்தான் துவங்குகிறது..
சுவீஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர் பட்டியலை மத்திய அரசு நினைத்தால் கேட்டுப்பெற முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வார்களா? என்பது சந்தேகம்தான், என்றார் விட்டல்.

இன்று முதல் சன் குழும காமெடி திரை ஒளிபரப்பு!

24 மணி நேரமும் மக்களைச் சிரிக்க வைக்க ஒரு புதிய சேனலை சன் நெட்வொர்க் இன்று முதல் அறிமுகப்படுத்துகிபறது.

காமெடித் திரை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிரிப்புச் சேனலில் முழுக்க முழுக்க சிரிப்புத் துணுக்குகள், நகைச் சுவைக் காட்சிகள், நகைச்சுவைத் திரைப்படங்கள், மற்றும் தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன.

சன் குழுமத்துக்கு ஏற்கெனவே சன்டிவி, கேடிவி, சன் நியூஸ், சுட்டி டிவி, சன் மியூசிக் ஆகிய 5 தமிழ் சேனல்கள் உள்ளன. இப்போது ஆறாவதாக காமெடித் திரை ஆரம்பமாகிறது.

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ஏராளமான சேனல்களை நிர்வகித்து வருகிறது சன் குழுமம். கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறுவர்கள் தொலைக்காட்சியான சுட்டி டிவிக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் புதிய முயற்சியில்
இறங்கியுள்ளதாக சன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சீரியல், சித்ரா, ஜோதிகா, சினேகா... லேகா! – ஒரு வெள்ளி விழா கதை!


ஒவ்வொரு வெற்றிகரமான மனிதரின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாரோ இல்லையோ... நிச்சயம் மிகப்பெரிய சவால்கள் நிறைந்தே இருக்கின்றன.


இவைதான் வளரும் தலைமுறைக்கான பாடங்களாகவும் மாறுகின்றன.
தமிழ் திரையுலகின் பன்முகத் திறமையாளரான லேகா ரத்னகுமாரின் 25 ஆண்டுகால கேரியர் அப்படி பல சவால்கள் நிறைந்ததுதான். இத்தனைக்கும் இவர் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி, அந்த சவாலை ஜெயிக்க நிறைய போராட்டங்களைச் சந்தித்து இன்று திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் லேகா.
இன்று அவரது லேகா புரொடக்ஷன்ஸூக்கு 25வது ஆண்டு... வெள்ளி விழா.
இதுகுறித்து லேகா ரத்னகுமார் இப்படிக் கூறுகிறார்:

விருதுநகரில் பிறந்தேன். நல்ல வசதியான குடும்பம். கல்யாணமாகி மனைவி குழந்தை என வீட்டில் செட்டிலாகிவிட்ட தருணத்தில், அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு வெளியில் வந்தேன். அந்த சண்டை ஒருவாரம் கூட நீடிக்க வில்லை என்றாலும், அதற்குப் பிறகு வீடு திரும்ப மனம் வரவில்லை.
என் நண்பர் ஷங்கர் கொடுத்த 50 ரூபாயுடன் கோவைக்கு வந்தேன். சொல்லப் போனால் அதுதான் என் முதல் முதலீடு.

இரண்டு நாள் பிளாட்பார வாசம். அப்போதுதான் ஆர்எஸ் புரம் ஜங்கஷனில் ஒரு பெரிய ஊதுபத்தி விளம்பரம் பார்த்தேன். நேராக அந்த முதலாளியிடம் போனேன். பெருமுயற்சிக்குப் பிறகு பார்த்தேன். என் ஐடியாக்களைச் சொன்னேன். முதல் ஆர்டர் கிடைத்தது. அதில் வந்த லாபம் ரூ.8000. அதன்பிறகு நிற்க நேரமில்லாமல் ஓடினேன். வரிசையாக பல வேலைகள்... சென்னைக்கு வந்தேன்.

அப்போதுதான் இதயம் நல்லெண்ணெய்க்கு ஒரு விளம்பரப் படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்... என்ற அந்த விளம்பரம்தான் என்னை பெரிய அளவு அடையாளம் காட்டியது.
தொடர்ந்து பல எண்ணெய்க் கம்பெனிகள் படமெடுக்க அழைத்தன. ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

எனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டேன். இனி ஒரே எண்ணெய் நிறுவனத்துக்கு மட்டுமே விளம்பரம் படங்கள் எடுப்பது என்பதே அது. எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் ஒரு தர்மம் வேண்டும்.
எண்பதுகளில் தொலைக்காட்சித் தொடர் எடுப்பதில் பல சாதனைகளை லேகா புரொடக்ஷன்ஸ் செய்துள்ளது.

எழுத்தாளர் ராஜோஷ்குமாரின் கதையை இருட்டில் ஒரு வானம்பாடி எனும் தொடராக எடுத்தேன். ஒரு திரைப்படத்துக்கு நிகரான பரபரப்புடன் பேசப்பட்ட தொடர் அது. அஞ்சாதே அஞ்சு போன்ற தொடர்கள் இன்றும் பேசப்படுகின்றன...” என்கிறார் ரத்னகுமார்.

பொதுவாக பிரபல முகங்களை வைத்து விளம்பரப் படங்கள் எடுத்து பொருளைப் பிரபலபர்படுத்துவார்கள். ஆனால் ரத்னகுமாரின் படமாக்கும் உத்தி, வேகமாக படப் பதிவு போன்றவை சித்ரா, ஜோதிகா, சினேகா என பிரபலங்களை இன்னும் பிரபலமாக்கியது.

சித்ராவும், ஜோதிகாவும் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்த பிறகு, அந்த அடைமொழியோடே அழைக்கப்பட்டார்கள்.

திட்டமிடல் என்பது பிஸினெஸ்மேனுக்கு மட்டுமல்ல, திரைக்கலைஞர்களுக்கும் மிக அவசியம். அந்தத் திட்டமிடல்தான் ரத்னகுமாரின் லேகா புரொடக்ஷன்ஸை வெள்ளி விழா கொண்டாட வைத்துள்ளது. ரத்னகுமாரை ஹாலிவுட் வரை கொண்டு போயிருக்கிறது.
ஆம், இவரது இசை ஆல்பங்களை இன்று ஹாலிவுட் படங்களிலும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே க்ளோவர்பீல்ட் படத்தில் இவரது ட்ராக் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

அதேபோல இந்திய அளவில் தயாரிப்பாளர்களுக்கு தேவைப்படும் இசையை ஏற்கெனவே உருவாக்கி வைத்து தருபவரும் லேகா ரத்னகுமார் ஒருவர்தான். ஜெர்மனியின் சொனாட்டான் நிறுவனத்துடன் இணைந்து லேகா சொனாட்டான் எனும் பெயரில் இவர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு பெரும் அளவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. தமிழில் பாக்யராஜ் படம், விஜய் டிவி, ஜெயா டிவி நிகழ்ச்சிகளுக்கு பின்னணி இசை, பிளேடு தீனாவின் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கான பின்னணி இசை... எல்லாமே லேகாவின் பங்களிப்புதான்.

இப்போது தனது வெள்ளிவிழா ஆண்டில் புதிய திரைப்படம் ஒன்றை மேகா ராஜ் எனும் புதுமுகத்தை வைத்துப் படமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் ரத்னகுமார்.

இந்தப் படமும் வெள்ளிவிழா கொண்டாடட்டும்!

Wednesday, September 3, 2008

ஆந்திராவில் தமிழ் படப்பிடிப்புகள் நிறுத்தம்!

தெலுங்கு ஸ்டன்ட் கலைஞர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஐதராபாத்தில் பல தமிழ்ப் படங்களின் படப் பிடிப்புகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
இன்றைக்கு பெரும்பாலான தமிழ் படங்களின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில்தான் நடக்கிறது. குறிப்பாக ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கே கோடம்பாக்கம் இடம் பெயர்ந்து விட்டதோ எனும் அளவுக்கு இங்கே ஏராளமான படப்பிடிப்புகள் நடக்கின்றன.

சென்னையில் பகலில் படப்பிடிப்புகள் நடத்தவும் சாலைகளில் படப்பிடிப்பு நடத்தவும் தடை விதித்திருப்பதே இதற்கு காரணம். ஆனால், இப்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் படங்களின் படப்பிடிப்பு நடக்கும்போது, சண்டைக் காட்சியில் தமிழ் ஸ்டன்ட் கலைஞர்களை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது, அங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் வாய்ப்பு தருகிறார்கள். இப்போது அங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்கள் சங்கத்தினர், ஒவ்வொரு தமிழ்ப் படத்திலும் 30 சதவீத தெலுங்கு ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வேலை தர வேண்டும் என கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஆந்திராவில் எந்த இடத்திலும் தமிழ் படங்களின் சண்டைக் காட்சிகள் தொடர்பான படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இந்நிலை கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

வரும் 16-ம் தேதி சென்னையில் கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் இப்பிரச்னைக்கு குறித்து பேச உள்ளனர். அதுவரை தமிழ் படங்களின் ஸ்டன்ட் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மட்டும் ஆந்திராவில் நடக்காது, எனத் தெரிகிறது.

நானோ ஆலை- இழுத்து மூடியது டாடா!!

மம்தா பானர்ஜியின் தொடர் மிரட்டல்கள் மற்றும் ஊழியர்களை வேலைக்கு வரவிடாமல் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளால் வெறுத்துப் போன டாடா நிறுவனம் சிங்கூரில் அமைத்துக் கொண்டிருந்த நானோ கார் தொழிற்சாலையை இன்று இழுத்து மூடியது.

இந்தத் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றுதல் குறித்து விரிவாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதே நேரம் வாக்குறுதியளித்தபடி நானோ காரை, டாடாவின் வேறு தொழிற்கூடத்திலிருந்து உற்பத்தி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் டாடா அதிபர் ரத்தன் டாடா நேற்று மாலை அறிவித்துள்ளார்.

முன்னதாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ரத்தன் டாடா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இப்போதைய சூழலில் நானோ தொழிற்சாலையை பிரச்சினையின்றி இயக்க முடியுமா என்பது மிகவும் சந்தேகமாக உள்ளது. நாங்கள் இந்தத் தொழிற்சாலையை மேற்கு வங்கத்துக்குக் கொண்டு வந்தது இந்த மாநிலத்துக்கு மேலும் மதிப்பைக் கூட்டவும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கவும்தான். ஆனால் இந்த மாநில மக்கள் ஆதரவு இல்லாமல் அது நடக்க வாய்ப்பே இல்லை.

நானோ தொழிற்சாலையைச் சுற்றிலும் இன்றைக்கு நிலவும் சூழல் மோசமாக உள்ளது, என்கிறார் டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர்.

வேறு தொழிற்சாலை, வேறு மாநிலம்...

நானோ தொழிற்சாலைக்கு வெளியே திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அவர்களது தொழிற் சங்கத்தினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்ததால், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி நான்கு தினங்களுக்கு முன்பு தொழிற்சாலைப் பணிகளை நிறுத்தியது டாடா.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, மத்தியபிரதேசம், ஒரிஸா, ஆந்திரா, உத்தரகண்ட், ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநில அரசுகள், நானோ தொழிற்சாலையை தங்கள் மாநிலத்துக்கு கொண்டு வந்து விடுமாறும், சகல வசதிகளையும் தாங்கள் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தன.

நானோ தொழிற்சாலைக்காக டாடா நிறுவனத்துக்கு 997.11 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்திக் கொடுத்தது மேற்கு வங்க அரசு. இதில் 400 ஏக்கர் விவசாய நிலத்தை அத்துமீறி அரசு எடுத்துள்ளதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு திருப்பித் தரவேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார் மம்தா பானர்ஜி.

இந்தப் பிரச்சினைகள் காரணமாக டாடாவின் ஒரு லட்ச ரூபாய் மக்கள் கார் நானோ அக்டோபரில் விற்பனைக்கு வருவது தள்ளிப் போடப்பட்டுள்ளது.

Saturday, August 30, 2008

அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா!

டெல்லி: அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பணிகளை வெளியாட்களுக்குத் தரும் அவுட் சோர்சிங் முறையைக் கைவிட வேணடும். அமெரிக்கர்களையே தொழில் நிறுவனங்களில் பயன்படுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி அதிபர் தேர்தல் வேட்பாளர் ஓபாமா கூறியுள்ளார்.

சமீபத்தில் ஓபாமா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, அமெரிக்க நிறுவனங்கள் அவுட் சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். அமெரிக்கர்கள் மயமாக தொழில் நிறுவனங்கள் இருக்க வேண்டும்.

நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க கம்பெனிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை ரத்து செய்வேன். அமெரிக்க வேலை வாய்ப்புகள் வெளிநாட்டினரிடம் ஒப்படைக்கப்படுவதை முற்றிலுமாகத் தடுப்பேன்.

அவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.

ஓபாமாவின் இந்தப் பேச்சு இந்திய தொழில் துறையினரை குறிப்பாக ஐடி துறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. காரணம் இன்றைக்கு இந்தியப் பொருளாதார வளரச்சியில் இந்த அவுட் சோர்சிங் வருமானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. என்றாலும் ஒபாமாவின் இந்தப் பேச்சுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அண்ணா நூற்றாண்டு விழா: ரூ.1-க்கு கிலோ அரசி!!

சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ.1க்கு விற்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒன்றாக,நியாய விலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

அதேபோல, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.2 வீதம் 20 கிலோ அரிசி மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா நூற்றாண்டு விழா தொடக்க நாளான செப்டம்பர் 15 முதல் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரையும், தமிழக அரசையும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வேண்டிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கிலோ அரிசி ரூ.1க்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைக்காரர்கள் பயனடைவார்கள்.

இது குறித்து இன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ. 400 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றார்.திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி கிலோ அரிசி ரூ.2க்கு தற்போது வழங்கி வருகிறது.

இந்நிலையில் விலையை மேலும் குறைத்து ரூ.1க்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி குறித்து வதந்தி:

முன்னதாக முதல்வர் கருணாநிதி குறித்து சென்னையின் சில இடங்களில் இன்று வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் இன்று சிலர் முதல்வர் கருணாநிதி குறித்து வதந்தி பரப்பினர். இதையடுத்து திமுக கொடிக் கம்பங்களில் இருந்த கொடிகளை அரைக் கம்பத்திலும் பறக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் அது வதந்தி என்று தெரிய வந்ததால் உடனடியாக கொடிகள் சரியான முறையில் பறக்க விடப்பட்டன.

சிங்கூரில் டாடா நானோ பணிகள் முடங்கின!

சிங்கூர்: திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டு வரும் தொடர் தர்ணா போராட்டத்தால் மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையில் 2-வது நாளாக பணிகள் முடங்கியது. இதனால் நானோ தொழிற்சாலையில் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
சிங்கூரிலிருந்து நானோ தொழிற்சாலையை மாற்றக் கோரியும், விவசாயிகளிடமிருந்து வாங்கிய 400 ஏக்கர் நிலத்தை திரும்பத் தரக் கோரியும், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சிங்கூரில் காலவரையற்ற தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.
இதனால் தனது தொழிற்சாலைக்கு வரும் தொழிலாளர்களையும், பணியாளர்களையும் த்ரிணாமூல் தொண்டர்களும், உள்ளூர் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலரும் தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதனால் அவர்களால் வேலைக்கு வர முடியவில்லை. நேற்று முதல் நானோ தொழிற்சாலையில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இன்றும் எந்தப் பணியும் நடைபெறவில்லை.
இப்போதைக்கு பணிகளைத் தொடங்க உகந்த நிலை சிங்கூரில் இல்லை என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டாடா நிறுவனத்தின் நானோ தொழிற்சாலையை தஙகள் மாநிலத்துக்கு மாற்றிவிடுமாறு பல்வேறு மாநில முதல்வர்களின் அழைப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

Friday, August 29, 2008

பணிப் பெண்கள், இன்டர் நெட்: ரயில் பயணங்கள் இனி அலுக்காது!

புதுடெல்லி : இனி ரயில்களிலும் பணிப் பெண்கள், நொறுக்குத் தீனி வழங்கள், இண்டர்நெட், தொலைக்காட்சி என விமானத்தை விட கூடுதல் வசதிகள் வர உள்ளன.

ரயில் பயணங்களை இனி விமானப் பயணத்தைவிட மேம்பட்டதாக மாற்ற ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ரயில்களில் பயணிகளுக்குச் சேவை செய்ய பணிப் பெண்களை நியமிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

ரயில்வே அமைச்சகமும் விரைவில் இதற்கு ஒப்புதல் கொடுக்கப் போகிறது. செப்டம்பர் மாதத்திலிருந்தே சதாப்தி, கஞ்சன் கன்யா எக்ஸ்பிரஸ் போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் மட்டும் பணிப் பெண்கள் அமர்த்தப்படுவர். அவர்கள் பயணிகளுக்குத் தேவையான காபி, டீ, நொறுக்குத் தீனி மற்றும் உணவு வகைகளை வழங்குவர்.

இதமான மெல்லிய இசையுடன், ரயில்களில் இண்டர்நெட், டிவி பார்க்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த வசதிகள் சாதாரண வகுப்பு பயணிகளுக்கும் கிடைக்கும் விதத்தில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நீல நிற கால் அங்கி மற்றும் வெள்ளை நிற சட்டை மற்றும் மேல்சட்டைகள் (பிளேசர்கள்) அணிந்து ரயில் பணிப் பெண்கள் சேவை செய்வர்.
உலகிலேயே இந்திய ரயில்வேயில்தான் முதன்முறையாக இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.

இது குறித்து ரயில்வே செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் மிகப் பெரிய துறையான இந்திய ரயில்வேயை சிறந்த முன்னோடி போக்குவரத்தாக மாற்றவே இந்த மேம்பட்ட சேவைகளை வழங்கவிருக்கிறோம்.

முதலில் 'கஞ்சன் கன்யா எக்ஸ்பிரஸ்' மற்றும் 'மேற்கு வங்க எக்ஸ்பிரஸ் ரயில்' களில் இத்திட்டம் அறிமுகமாகும். செப்டம்பர் 20 முதல் இண்டர்நெட், தொலைக்காட்சி வசதி அறிமுகப்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரவ் ஷாவின் ரூ.100 கோடி கனவு!

கிழக்கு கடற்கரைச் சாலையில் நீரவ் ஷாவின் கனவு நகரம்!

கோலிவுட்டின் இன்றைய ஹாட் ஒளிப்பதிவாரான நீரவ் ஷா சொந்தமாக ஒரு மிகப் பெரிய திரைபேபட நகரை ரூ.100 கோடி செலவில் உருவாக்கப் போகிறார்.

ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு இணையாக இந்த திரைப்பட நகரை சென்னையில் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இற்ஙகியுள்ளார் நீரவ் ஷா.
இதற்காக ரூ.100 கோடியில் அவர் உருவாக்கியுள்ள திட்டத்துக்கு அரசுத் தரப்பிலும் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்தத் தொகை தோராயமானதுதான், போகப்போக அதசு இருமடங்காகனாலும் வியப்பதற்கில்லை, என்கிறார்கள்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த ஸ்டுடியோவில் ஹாலிவுட்டில் உள்ள அத்தனை நவீன வதிகளும் செய்து தரப்படும் என்கிறார் நீரவ் ஷா.

ஒளிப்பதிவாளர்களின் சிரமத்தை மிகவும் உணர்ந்தவர் என்பதால், ரிமோட் மூலம் இயங்கக் கூடிய நிரந்தர ஒளிவசதியை (காட்சிக்குத் தேவையான ஒளி வசதியை எந்த நேரத்திலும் பெறமுடியும்!) இந்த ஸ்டுடியோவில் அமைக்கவிருக்கிறாராம் நீரவ் ஷா.
இந்த ஸ்டுடியோவுக்கான பூமி பூஜை செப்டம்பர் முதல் வாரத்தில் போடப்படவுள்ளது.

சென்னை நகருக்குள்ளேயே ஏற்கெனவே அரசுக்குச் சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட நகர் இருந்தாலும், போதிய பராமரிப்பின்றி தற்போது மூடப்பட்டுக் கிடக்கிறது அந்த அருமையான நகரம். இதனால் தமிழ்ப் படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் நடக்கின்றன.
இந் நிலையை மாற்றி, பல மொழிகளில் ஏராளமான படங்கள் உருவாகும் சென்னையில் அனைத்து வசதிகளும் நிறைந்த நிரந்தரமான ஸ்டுடியோ அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் நீரவ் ஷா.
நல்ல முயற்சி, திருவினையாகட்டும்!

ஏற்கெனவே திருமணமான பாய் பிரண்டை மணக்கிறார் ஷில்பா!

விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்துள்ளார் ஷில்பா ஷெட்டி.
இந்த முறை வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், தனது வருங்காலக் கணவர் யார் என்பதையும் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திருமணமாகி மனைவியுடன் வசிக்கும் தனது நீண்ட நாள் பாய் பிரண்ட் ராஜ் குந்த்ரா என்பவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் ஷில்பா.
இந்திப் படவுலகில் மார்க்கெட் இழக்கும் தருணத்தில் பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார் ஷில்பா ஷெட்டி. பல கோடி ரூபாய் பரிசுகளும் புகழும் அவருக்குக் குவிந்தன. கிட்டத்தட்ட உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யாவுக்கு நிகராகப் பேசப்படும் நடிகையாகி விட்டார் ஷில்பா.

இப்போது அவர் கைவசம் இந்திப் படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் வாய்ப்புகளும் நிறைய உள்ளன. விரைவில் புதிய ஜேம்ஸ்பாண்ட் படமான குவாண்டம் ஆப் சோலேஸில் இரண்டு நிமிட சிறப்புக் காட்சியில் தோன்றுகிறார் ஷில்பா.

பிக் பிரதர் நிகழ்ச்சியின் இந்திய வடிவமான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பும் ஷில்பாவிடமே வழங்கப்பட்டுள்ளது.
இத்தனைப் புகழ், பணம் சேர்ந்த பின் வாழ்க்கையில் செட்டிலாவதுதானே முறை?

அந்த முயற்சியில்தான் ஷில்பாவும் இறங்கியிருக்கிறார்.
எப்போது திருமணம் என்று கேட்டால், இப்போது என்ன அவசரம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி வந்தவர், இப்போது அடிக்கடி திருமணம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

ராஜ் குந்த்ரா என்பவரைத்தான் ஷில்பா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம். ஷில்பாவின் நெடு நாள் பாய் பிரண்ட் இந்த ராஜ் குந்தர். அதுமட்டுமல்ல... இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கவிதா என்ற மனைவியும் உள்ளார்.

"தற்போது என் கைவசமுள்ள பொறுப்புகளை முடித்துத் தரவே எனக்கு குறைந்த்து ஒரு வருடம் ஆகும். அதற்கப்புறம் கல்யாணத்துக்கு 6 மாதங்களாவது டைம் வேண்டாமா... ஆனால் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொண்டு, இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு, என்கிறார் ஷில்பா.

எல்லாம் சரிதான், இந்தக் கல்யாணத்துக்கு ராஜ் குந்தரின் மனைவி ஒப்புக் கொள்வாரா?

பங்கு வர்த்தகத்தில் மோகன் லால்!

கொச்சி: நடிப்பில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் தன்னை கேரளாவின் சூப்பர் ஸ்டார் என்று நிரூபிக்க முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது பிரபல நடிகர் மோகன்லால்.

ஓட்டல் பிஸினெஸ், சினிமா திரையரங்கங்கள், மல்டிபிளக்ஸ்கள் என தனது வியாபார எல்லைகளை விஸ்தரித்து வந்த அவர், இப்போது பங்கு வர்த்தகத்திலும் தீவிரமாக இறங்கிவிட்டார்.


இதற்காக, பேபி மரைன் எக்ஸ்போர்ட்ஸ், பெடக்ஸ் செக்யூரிட்டீஸ், சுமார்ட் பைனான்சியல் தாக்கர் குரூப் மற்றம் தொழிலதிபர் எஸ்.எம்.ஷெக்டே போன்றோருடன் கைகோர்த்துள்ளார்.


இதற்காக மோகன் லால் துவங்கியுள்ள நிறுவனம் ‘ஹெட்ஜி ஈகுவிட்டீஸ்’ . இந்த நிறுவனம் விரைவில் தன் செயல்பாடுகளை துவக்க விருக்கிறது. கேரள அரசின் ஜியோஜித் பைனான்ஸூக்கு நிகராக இந்நிறுவனத்தின் வணிகத்தைப் பெருக்கும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார் மோகன்லால்.
எனவேதான் கேரளா முழுவதும் 15 கிளைகள் திறக்கப்பட உள்ளதோடு, தமிழகம், ஆந்திராவிலும் கூட கூடுதலாக கிளைகள் திறக்க முடிவெடுத்துள்ளார் மோகன்லால்.


ஜியோஜித் போலவே, பங்கு வர்த்தகம், பரஸ்பர நிதி உட்பட பல வகையான நிதி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு ‘ஹெட்ஜி ஈகுவிட்டீஸ்’ வழங்க உள்ளது.


இந்திய அளவில் பங்கு வர்த்தகத்தில் இவ்வளவு பிரமாண்டமான திட்டங்களுடன் ஈடுபடும் முதல் நடிகர் மோகன்லால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

என்.டி.ஆர். பாணியில் சிரஞ்சீவியும் ரதயாத்திரை!

ஐதராபாத்: மறைந்த என்.டி.ராமாராவ் பாணியில் சமீபத்தில் பிரஜா ராஜ்யம் கட்சி தொடங்கிய சிரஞ்சீவியும் விரைவில் ரத யாத்திரை துவங்குகிறார். தனது கட்சிக்கு மக்களிடம் ஆதரவு கேட்டு, ஆந்திரா முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரத யாத்திரை செல்கிறார்.

இதற்கான திட்டங்களை அவருடைய உதவியாளர்களும், பல கட்சிகளில் இருந்து அனுபவம் பெற்று தற்போது சிரஞ்சீவி கட்சிக்கு வந்துள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களும் வகுத்து வருகிறார்கள்.

ஆந்திர சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் ஆந்திராவின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து மக்கள் ஆதரவைத் திரட்டிவிட வேண்டும் என்பது சிரஞ்சீவியின் நோக்கம்.
இந்த ரத யாத்திரையே சிரஞ்சீவியின் தேர்தல் பிரசாரமாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

53 வயதான சிரஞ்சீவி, கபு சமுதாயத்தை சேர்ந்தவர். ஆந்திராவில் 100 சட்டப்பேரவை தொகுதிகளில் இந்த சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். எனவே, முதல் கட்டமாக இந்த தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்ய உள்ளார்.

அடுத்த கட்டமாக, விஜயசாந்தி குறிவைத்துள்ள தெலுங்கானாவில் உள்ள 100 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார் என அவரது கட்சி வட்டாரங்கள் தகவல் பரப்பி வருகின்றன.

மறைந்த என்.டி.ராமராவ் 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி 9 மாதங்களில் ஆட்சியைப் பிடித்தார். பின்னர் அவரது ஆட்சியை மூத்த அமைச்சர் பாஸ்கர ராவ் உடனிருந்து கவிழ்த்தார்.

இதைத் தொடர்ந்து மக்களிடம் நீதி கேட்டு என்.டி.ராமராவ் மாநிலம் முழுவதும் வேனில் பிரசார பயணம் மேற்கொண்டார். இந்த பிரசார பயணத்துக்கு சைதன்ய ரதயாத்திரை என்று பெயர் சூட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் என்டிஆர். அதே பிரசார பாணியை சிரஞ்சீவியும் பின்பற்ற முடிவு செய்துள்ளார்.

பணவீக்கம் 0.23 சதவிகிதம் குறைந்தது!

உணவு அல்லாத உற்பத்திப் பொருட்களின் விலை யில் ஏற்பட்டுள்ள திடீர் விலைக் குறைவு காரணமாக பணவீக்கம் 0.23 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் முடிவடாந்த வாரத்தில் பணவீக்கத்தின் அளவு 12.63 சதவிகிதமாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச பணவீக்க அளவு இது.
இந்த வாரம், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், மற்ற 30 முக்கியப் பொருட்களின் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. கனிமப் பொருட்கள், எரிபொருள், மின்சாரம், எண்ணெய், உலோகமல்லாத கனிமங்கள் ஆகியவற்றின் விலை எதிர்ப்பார்ப்புக்கு மாறாக குறைந்து காணப்பட்டது.

இதன் விளைவாக பணவீக்கமும் 0.23 சதவிகிதம் குறைந்து 12.40-க்கு வந்திருக்கிறது.
இதுகுறித்து நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகையில், இது உண்மையில் மிக நல்ல அறிகுறி. இப்போதுதான் ஓரளவு நிம்மதியாக உணர்கிறேன். வரும் நாட்களில் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிடும் என நம்புகிறேன், என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் போக்கு தற்காலிகமானது என்றும், பணவீக்கம் 14 புள்ளிகள் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் கூறியது நினைவிருக்கலாம்.
உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களில் ஏற்படக்கூடிய விலைக் குறைவுதான் பணவீக்கத்தின் போக்கை தீர்மானிக்கும் நிஜ காரணிகள். அதில் ஒரு நிலைத் தன்மை வரும்வரை இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் தொடரும், என்கிறார் ரங்கராஜன்.
பணவீக்கத்தின் போக்கை மேலும் குறைக்க வங்கி வட்டி, மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் உயர்த்தும் திட்டத்தில் உள்ளது ரிசர்வ் வங்கி.

Monday, August 25, 2008

இந்தியா - 62: பொருளாதார சுதந்திரம் எப்போது?

டாக்டர் எஸ். ஷங்கர்
இவர்கள் வல்லரசாகப் போகிறார்களா... சும்மா ஜோக் பண்ணாதீங்க. தங்களுக்குள் இருக்கிற ஜாதியையும் வறுமையையும் ஜெயிக்க முடியாத இவர்கள் என்றைக்கு உலகை ஜெயிப்பது?
– 2020-ல் இந்தியா உலகின் வலிமை மிக்க வல்லரசாகிவிடும் என்ற டாக்டர் அப்துல் கலாமின் கனவைக் கேலி செய்து இங்கிலாந்தின் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்ட ஒரு கட்டுரையின் சாரம் இதுதான்!
ஆனால் கங்காரு தன் குட்டியைச் சுமப்பது போல, ஒரு பக்கம் தன் வறுமையைச் சுமந்து கொண்டே, லஞ்சம், வகுப்புவாதம், மொழி வெறி, ஜாதித் துவேஷம், எப்போதும் வளர்ச்சிக்கு நந்திகளாய் திகழும் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் என எக்கச்சக்க ஸ்பீட் பிரேக்கர்களைத் தாண்டி இன்று உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கிறது இந்தியா.

அப்படியென்றால் நாம் உண்மையிலேயே வளர்ந்து விட்டோமா... நாம் வளர்ந்துவிட்ட மாயம் நமக்கே புரியாமல்தான் இருக்கிறோமா...
இந்தியப் பொருளாதாரத்தின் நிஜமான வலிமை என்ன?

ஒரு சின்ன பிளாஷ்பேக்...
டாக்டர் ராபின்ஸன் மற்றும் எம்.என். ராயின் வார்த்தைகளில் சொல்வதானால், கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனத்தை பிரிட்டிஷ்காரர்கள் தொடங்கிய 17-ம் நூற்றாண்டில், அமெரிக்கா என்ற தேசமே பழங்குடியினரின் பூமியாய் இருந்த காலத்தில், உலகின் மொத்த உற்பத்தியில் பிரிட்டனின் பங்கு கிட்டத்தட்ட 2 சதவிகிதம். இந்தியாவின் பங்கு 22 சதவிகிதம். (அட, நாமதான் வல்லரசு அன்றைக்கு!)
இத்தனைக்கும் அன்று இந்தியா ஒன்றுபட்ட தேசமல்ல. 700க்கும் மேற்பட்ட சிற்றரசுகள், சுதந்திர சமஸ்தானங்கள் மற்றும் நிஜாம்களாக இருந்தது. அப்படி பிளவுண்டு கிடந்த தேசத்தின் பொருளாதார வளத்தை மொத்தமாக கணக்கெடுத்துச் சொன்னவரும் ஒரு பிரிட்டிஷ் அதிகாரிதான். அந்தப் புள்ளி விவரங்கள்தான் இந்தியாவின் மீது பிரிட்டிஷ்காரர்களின் பிடி இறுகக் காரணமாகிவிட்டது.

அடுத்து வந்த 100 ஆண்டுகளில் பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் உலகப் பங்களிப்பு 9 சதவிகிதமாக உயர்ந்தது. இந்தியா பின்னடைந்த நாடுகளுள் ஒன்றாக மாறிப்போனது.
பெருளாதார வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்த தேசம் பிற்போக்கு சக்திகளின் பிடிக்குள் போய்விட, மதங்களும் ஜாதீயமும் பொருளாதாரத்தின் வேரறுத்து, வளர்ச்சியை ஒற்றை இலக்கத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டன... போகப்போக உலகின் குப்பைத் தொட்டியாகி வறுமை, நோய்களின் தேசமாக மாறிப்போனது...’
- எத்தனை சத்தியமான வார்த்தைகள்!
ஜனநாயகம் இப்போது வேண்டாம்!
நேரு, இந்திராவின் காலத்தில் பொருளாதாரம் முழுக்க முழுக்க கிராமங்களை மட்டுமே பிரதானப்படுத்தியபடி நகர்ந்தது. அவர்களின் காலத்தில் வளர்ச்சிக்கான முயற்சிகள் பெருமளவு மேற்கொள்ளப்பட்டன என்பதை விட SURVIVAL FACTORS-க்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.
குற்றுயிரும் குலையுயிருமாக வந்த இந்தியப் பொருளாதாரத்தை உயிரோடு வைத்துக் கொள்வதில் நேரு மிகுந்த அக்கறை காட்டினார். இந்திராவோ பொருளாதாரத்தோடு சேர்த்து தன் அரசியலையும் உயிருடன் வைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருந்தது.
இதனால்தான் ஒரு கட்டத்தில், இந்தியாவுக்கு மக்களாட்சி முறை பொருந்தாது என அவர் முடிவு செய்து அதை செயலிலும் காட்ட முயன்று தோற்றார் (ஏதாவது ஒரு பக்கத்திலாவது முழுமையாக எதிர்ப்புகளே இல்லாமல் இருந்தால், என்னால் இந்தியாவில் பல மாறுதல்களைக் கொண்டுவர முடியும் – பிரதமர் இந்திரா காந்தி, 1975).
‘இந்தியா போன்ற பின்தங்கிய, விழிப்புணர்வற்ற தேசத்துக்கு கொஞ்சகாலம் சர்வாதிகாரமே சிறந்தது. சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி வலுவான பொருளாதாரத்தை ஏற்படுத்திய பிறகு, ஜனநாயகத்தைக் கொண்டுவரலாம்’ என்ற Hardliner சஞ்சய் காந்தியின் யோசனைகள் இந்திராவுக்கும் சரியாகவே தோன்றின அன்றைக்கு.

இந்த முடிவுக்கு அவர் வர இன்னொரு முக்கியக் காரணம், அடுத்தடுத்து இரு ஐந்தாண்டுத் திட்டங்களில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது.
ஒரு குழந்தையை ராணுவக் கட்டுப்பாட்டோடு வளர்த்து பின்னர், சாதாரண வாழ்க்கைக்குத் திருப்புவது ஒரு வளர்ப்பு முறை.
வறுமை, பசி, வன்முறை, நிச்சயமற்ற நிலை போன்ற முரட்டுச் சூழலில் வளர்த்தெடுப்பது ஒரு முறை.
இந்திரா காந்தி இந்தியப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க விரும்பியது முதல் சூழலில். ஆனால் தன் முயற்சிகள் தோற்றதைப் பார்த்த பிறகுதான் போக்கை மாற்றிக் கொண்டார். இந்தியப் பொருளாதாரம் கடுமையான இந்த இரண்டாவது சூழலிலேயே வளரட்டும் என விட்டுவிட்டார்.
விளைவு, 5-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் வெற்றி கண்டோம். பசுமைப் புரட்சியால், உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவும் பெற்றோம்.

இது ராஜீவ் போட்டுக்கொடுத்த ரூட்!
சுதந்திர இந்தியாவின் சிற்பி என நேருவைப் புகழந்தாலும், நவீன இந்தியாவின் சிற்பி என்னமோ ராஜீவ் காந்திதான். இந்த வாதம் உங்களுக்கு சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். ராஜீவ் தன் ஆட்சிக் காலத்தின் இறுதி நாட்களில் செய்த தவறுகள், அவரது அரசியல் அணுகுமுறை குறித்த விமர்சனங்கள் இங்கே வேண்டாம்.
அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் இன்றைய பொருளாதார வளர்ச்சி (மற்றும் பணவீக்க நெருக்கடி) இரண்டுக்குமே ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ராஜீவ் காந்திதான்.
அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்கள்.
இன்று உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் டாப் 10 நாடுகளுள் நாமும் ஒன்றாக மாறியிருக்கிறோம்.

கனவு மெய்ப்பட...
ராஜீவ், விபி சிங், நரசிம்மராவ், வாஜ்பாய் என பிரதமர்கள் மாறினாலும் பொருளாதார வளர்ச்சிக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் போராட்டத்துக்கு நடுவே வளர்ந்த பொருளாதாரம் என்பதால் எந்தத் தடுமாற்றத்தையும் தாங்கும் சக்தியைப் பெற்றுள்ளோம்.
‘பொக்ரான் அணு சோதனை – இந்தியா மீது பொருளாதாரத் தடை’ அதையும் தாங்கிக் கொண்டோம். அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் மேலும் சில தடைகள், அதையும் தாங்கினோம். காட் ஒப்பந்தத்தில் இந்தியாவை கொண்டுபோய் வகையாகச் சிக்க வைத்தார்கள், அதையும் சமாளிக்கிறோம். ஐஎம்எப், உலக வங்கி இரண்டும் கழுத்துக்கு வைத்த கத்திகளிலிருந்தும் தக்க நேரம் பார்த்துத் தப்பித்துக் கொண்டோம்.
இடையில் ஓயாத மதச் சண்டைகள், அரசியல் நிலையில்லாமை.... இதுவும் கடந்து போகும் என்ற தத்துவத்தைச் சொல்லியபடி அவற்றையும் தாண்டி பயணத்தைத் தொடர்கிறோம்.
அதுதான் இந்தியாவின் சிறப்பம்சம்.

கடுமையான சூழலில் வளரும் ஒரு மனிதன் எந்தச் நெருக்கடியையும் சமாளிக்கும் அளவு தெளிவாக இருப்பான் அல்லவா... இந்தியப் பொருளாதாரமும் அப்படி ஒரு நிலைக்கு வரும் என்பதுதான் 2020-ல் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியபோது டாக்டர் கலாமின் எதிர்பார்ப்பாக இருந்தது.

‘வெறும் கனவல்ல நான் காண்பது... இந்தியாவின் வரலாற்றைப் படித்தவன். சுதந்திரத்துக்குப் பிந்தைய 60 ஆண்டுகளை முழுமையாக உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இந்தியா வல்லரசாவது 2020-ல் நிச்சயம் நடக்கும்’, என்கிறார் கலாம் இப்போதும் அதே உறுதியுடன்.

ஆனாலும் நம்மை நாமே பல விஷயங்களில் வென்று வரவேண்டிய கட்டாய சூழல் இன்றைக்கு. கலாமின் கனவு நிறைவேறும் முன் நாம் நிச்சயமாக வெல்ல வேண்டிய தீய சக்திகள் இவைதான்...
பல பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் இந்தியாவில் குவிகிறது. 2000 புள்ளிகளுக்குள்ளேயே நொண்டியடித்துக் கொண்டிருந்த பங்குச் சந்தை 15000 புள்ளிகளைத் தாண்டிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இன்னொரு பக்கம் வறுமை வாட்டுகிறது.

ஐடி, எஞ்சினியரிங் பட்டதாரிகள் மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க, அரசு கலைக் கல்லூரிகளில் படித்தவர்கள் சம்பளம் 3000 ரூபாயைத் தாண்ட யோசிக்கிறது.
3.5 கோடி பேர் நல்ல சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள், 350 மில்லின் மக்கள் இன்னும் வறுமையில் கிடக்கிறார்கள். 23 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் இந்தியா என்ற தேசம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, பாழ்பட்டுக் கிடந்திருக்கலாம். ஆனால் இந்த வார்த்தையைச் சொன்ன பாரதிக்குப் பின் வந்த காலத்தில் கல்வியில் தாழ்வுற்ற நிலையிலிருந்து மீண்டிருக்கிறோம்.
இன்று நம் அறிவுக் கண்கள் திறந்தேயிருக்கின்றன. ஆனால் தெரிந்தே மூடத்தனத்தை ஆராதிக்கும் போக்கு... அதிலிருந்து விடுபடுவது மிக முக்கியம்.
இந்தியன் என்று சொல்லிக் கொள்ளும்போதே நாடி நரம்புகள் முறுக்கேறி உணர்ச்சி வசப்படுவதெல்லாம் சரிதான்... ஆனால் பக்கத்து மாநிலத்துக்காரனுக்குத் தண்ணீர் தரவேண்டுமென்றதும் பஸ்களையும் அப்பாவிகளையும் கொளுத்தும் பிற்போக்குத் தனத்தை எப்போது விடப் போகிறோம்?
கல்வி வேலை வாய்ப்புகளில், தமக்குக் கீழே உள்ள சக இந்தியன் ஒருவன் மேலேறி வரட்டும் என பரந்த மனப்பான்மையோடு எப்போது கைகொடுக்கப் போகிறோம்? அல்லது அப்படிக் கைகொடுக்கும் அரசின் முயற்சிகளை எப்போது முடக்காமல் இருக்கப் போகிறோம்?
அரசு நடப்பது லாப நஷ்டக் கணக்கு பார்க்க அல்ல... இது மக்கள் பணத்தில் நடக்கிற அரசு. பெட்ரோலியம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறபோது மக்களுக்காக மாநில அரசுகள் தங்கள் வரிகளைக் குறைத்து, பணவீக்கம் குறைய எப்போது உதவப் போகின்றன?
முதலில் இவற்றை வென்றால்தான் நாம் உலகப் பொருளாதாரத்தை நிஜமாகவே வென்றெடுக்க முடியும். அந்த வெற்றியையும் உணர, அனுபவிக்க முடியும்!
ஜெய்ஹிந்த்!

Monday, August 11, 2008

ஒலிம்பிக்: இந்தியாவின் முதல் தங்க மகனுக்கு பரிசுகள் குவிகின்றன!!


பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர்-ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தப் பதக்கம் 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்குக் கிடாத்த முதல் பதக்கம்மட்டுமல்ல, ஒலிம்பிக் தனி நபர் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கமும் கூட.

இவருக்கு அடுத்தபடியாக சீனாவின் கினான்-ஷு வெள்ளிப் பதக்கத்தையும், பின்லாந்து வீரர் ஹென்றி ஹக்கினென் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். எனினும், இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ககன் நரங், ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பைத் தவற விட்டார்.
இப்போட்டியின் 6வது சுற்றில் 9.917 புள்ளிகளுடன் இருந்த ககன் நரங், அடுத்த சுற்றில் 98 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதில் மற்ற வீரர்கள் 99 அல்லது 100 புள்ளிகளை எடுத்ததால் ககன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுதிக்கான வாய்ப்பை இழந்தார்.
இந்தியாவுக்கு 9வது ஒலிம்பிக் தங்கம்:
கடந்த 1980ஆம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி, ஸ்பெயின் அணியை 4-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அப்பதக்கம் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 8வது தங்கப்பதக்கம்.
அந்த பதக்கம் வெல்லப்பட்டு 28 ஆண்டுகள் பின்னர் தற்போது அபினவ் பிந்த்ரா 9வது தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்காக வென்றுள்ளார்.
ஒரு கோடி பரிசு!
இந்தியாவுக்கு முதல் தனி நபர் தங்கம் வென்ற அப்நவ்வுக்கு பஞ்சாப் மாநில அரசு ரூ.1 கோடி பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.
இ‌ந்த வெ‌ற்‌றி‌யி‌ன் மூல‌ம் ஒ‌ட்டு மொ‌த்த இ‌ந்‌தியாவு‌க்கு‌ம் அ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ரா பெருமை சே‌ர்‌த்து‌ள்ளதாக பஞ்சாப் முதலமை‌ச்ச‌ர் ‌பிரகா‌ஷ் ‌சி‌ங் பாத‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதேபோ‌ல், அ‌ரியானா மா‌நில முதலமை‌ச்ச‌ர் பூ‌‌பிந்த‌ர் ‌சி‌ங் ஹூடா, ‌பி‌ந்‌த்ராவு‌க்கு ரூ.25 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்குவதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


Sunday, August 10, 2008

கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு!

பேரலுக்கு 120 டாலரானது கச்சா எண்ணெய்!
கச்சா எண்ணெயின் விலை மேலும் 4 டாலர்கள் குறைந்து பேரலுக்கு 120 டாலர் என்ற நிலைக்கு வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இந்த அளவு விலை குறைவது இதுவே முதல் முறை.
ஜூலை மத்தியில் 147 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கப் பொருளாதாரத்தின் இறங்குமுகம் மற்றும் அமெரிக்கர்களின் நுகர்வுக் குறைவு காரணமாக 27 டாலர்கள் குறைந்துள்ளது. இந்நிலை மேலும் தொடர்ந்தால் அடுத்த மூன்று வாரங்களில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலர்களுக்குள் வந்துவிடும் என்று வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பயமுறுத்தும் ஈரான்!
ஆனால் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைவதும், விண்ணைத் தொடுமளவுக்கு உயர்வதும் இப்போது ஈரானின் கையில் உள்ளதாக உலக நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. காரணம் தனது அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் சோதனை முயற்சிகளை இன்னமும் அந்நாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அணு ஆயுத சோதனையை ஈரான் நிறுத்திக் கொள்ள இந்த வார இறுதி வரை ஐநாவின் பாதிகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நிரந்த உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி போன்றவை கெடுவிதித்திருந்தன. ஆனால் அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை ஈரான். இதனால் அந்நாட்டின் மீது புதிய தடைகளை விதிக்கத் தயாராகிறது ஐ.நா. (அதாவது அமெரிக்காவும் இங்கிலாந்தும்!)

ஈரான் மீது போர்தொடுக்கும்படி ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளிப்படையாக அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஒருவேளை நிலைமை எல்லை மீறிப்போனால், ஹோர்மோஸ் (Hormoz) நீர் சந்திப்பை ஈரான் தகர்க்கும் அபாயமுள்ளது. இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்குத் தேவையான 40 சதவிகித கச்சா எண்ணெய் ஓபெக் (OPEC) நாடுகளிலிருந்து வந்தாக வேண்டும். ஈரானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த வழித்தடத்தை ஈரான் அடைத்துவிட்டாலோ அல்லது அந்த வழியாக வரும் டேங்கர் கப்பல்களைத் தகர்க்க ஆரம்பித்துவிட்டாலோ, எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிடும்.
எனவேதான் ஈரான் மீதான நடவடிக்கையை இன்னும் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகின்றன அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்!