Showing posts with label Chirajeevi. Show all posts
Showing posts with label Chirajeevi. Show all posts

Friday, August 29, 2008

என்.டி.ஆர். பாணியில் சிரஞ்சீவியும் ரதயாத்திரை!

ஐதராபாத்: மறைந்த என்.டி.ராமாராவ் பாணியில் சமீபத்தில் பிரஜா ராஜ்யம் கட்சி தொடங்கிய சிரஞ்சீவியும் விரைவில் ரத யாத்திரை துவங்குகிறார். தனது கட்சிக்கு மக்களிடம் ஆதரவு கேட்டு, ஆந்திரா முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரத யாத்திரை செல்கிறார்.

இதற்கான திட்டங்களை அவருடைய உதவியாளர்களும், பல கட்சிகளில் இருந்து அனுபவம் பெற்று தற்போது சிரஞ்சீவி கட்சிக்கு வந்துள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களும் வகுத்து வருகிறார்கள்.

ஆந்திர சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் ஆந்திராவின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து மக்கள் ஆதரவைத் திரட்டிவிட வேண்டும் என்பது சிரஞ்சீவியின் நோக்கம்.
இந்த ரத யாத்திரையே சிரஞ்சீவியின் தேர்தல் பிரசாரமாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

53 வயதான சிரஞ்சீவி, கபு சமுதாயத்தை சேர்ந்தவர். ஆந்திராவில் 100 சட்டப்பேரவை தொகுதிகளில் இந்த சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். எனவே, முதல் கட்டமாக இந்த தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்ய உள்ளார்.

அடுத்த கட்டமாக, விஜயசாந்தி குறிவைத்துள்ள தெலுங்கானாவில் உள்ள 100 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார் என அவரது கட்சி வட்டாரங்கள் தகவல் பரப்பி வருகின்றன.

மறைந்த என்.டி.ராமராவ் 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி 9 மாதங்களில் ஆட்சியைப் பிடித்தார். பின்னர் அவரது ஆட்சியை மூத்த அமைச்சர் பாஸ்கர ராவ் உடனிருந்து கவிழ்த்தார்.

இதைத் தொடர்ந்து மக்களிடம் நீதி கேட்டு என்.டி.ராமராவ் மாநிலம் முழுவதும் வேனில் பிரசார பயணம் மேற்கொண்டார். இந்த பிரசார பயணத்துக்கு சைதன்ய ரதயாத்திரை என்று பெயர் சூட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் என்டிஆர். அதே பிரசார பாணியை சிரஞ்சீவியும் பின்பற்ற முடிவு செய்துள்ளார்.