Showing posts with label Inflation. Show all posts
Showing posts with label Inflation. Show all posts

Friday, August 29, 2008

பணவீக்கம் 0.23 சதவிகிதம் குறைந்தது!

உணவு அல்லாத உற்பத்திப் பொருட்களின் விலை யில் ஏற்பட்டுள்ள திடீர் விலைக் குறைவு காரணமாக பணவீக்கம் 0.23 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் முடிவடாந்த வாரத்தில் பணவீக்கத்தின் அளவு 12.63 சதவிகிதமாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச பணவீக்க அளவு இது.
இந்த வாரம், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், மற்ற 30 முக்கியப் பொருட்களின் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. கனிமப் பொருட்கள், எரிபொருள், மின்சாரம், எண்ணெய், உலோகமல்லாத கனிமங்கள் ஆகியவற்றின் விலை எதிர்ப்பார்ப்புக்கு மாறாக குறைந்து காணப்பட்டது.

இதன் விளைவாக பணவீக்கமும் 0.23 சதவிகிதம் குறைந்து 12.40-க்கு வந்திருக்கிறது.
இதுகுறித்து நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகையில், இது உண்மையில் மிக நல்ல அறிகுறி. இப்போதுதான் ஓரளவு நிம்மதியாக உணர்கிறேன். வரும் நாட்களில் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிடும் என நம்புகிறேன், என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் போக்கு தற்காலிகமானது என்றும், பணவீக்கம் 14 புள்ளிகள் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் கூறியது நினைவிருக்கலாம்.
உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களில் ஏற்படக்கூடிய விலைக் குறைவுதான் பணவீக்கத்தின் போக்கை தீர்மானிக்கும் நிஜ காரணிகள். அதில் ஒரு நிலைத் தன்மை வரும்வரை இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் தொடரும், என்கிறார் ரங்கராஜன்.
பணவீக்கத்தின் போக்கை மேலும் குறைக்க வங்கி வட்டி, மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் உயர்த்தும் திட்டத்தில் உள்ளது ரிசர்வ் வங்கி.

Sunday, August 10, 2008

இது ஆரோக்கியமல்ல! - ஒரு எச்சரிக்கை!!


டாக்டர் எஸ்.ஷங்கர்


பணவீக்கம்: கண்மூடித்தனமான பணக் கொள்கையும் ஆபத்தே!


அடுத்த ஆறு மாதங்களுக்குள் பணவீக்கத்தை 7 முதல் 5 சதவிகிதத்துக்குள் கொண்டு வரவே இந்த கடுமையான பணக்கொள்கையைக் கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம், என்ற அறிவிப்போடு சிஆர்ஆர், ரெபோ ரேட்டை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம், வங்கிகளுக்கு அளிக்கப்படும் ரொக்கத்துக்கான வட்டி விகிதம் இரண்டையுமே ரிசர்வ் வங்கி உயர்த்தியிருப்பதால் அடுத்து வரும் நாட்களில் வங்கிகள் வழங்கப்போகும் பல வகைக் கடன்களுக்கான வட்டிகளும் கணிசமாக உயர்த்தப்பட உள்ளன.

வீட்டுக் கடன், வணிக விரிவாக்கக் கடன்கள், புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கான கடன்கள், தனிநபர், நுகர்வோர் கடன்கள் அனைத்துக்குமே தற்போது வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தில் குறைந்தபட்சம் 3 சதவிகிதம் வரை வட்டியை உயர்த்த உள்ளதாக வணிக வங்கிகள் கூறுகின்றன.
இது ஒரு உத்தேசம்தான். இதைவிட இன்னும் கூடுதலாகக் கூட வட்டி விகிதங்கள் உயரக்கூடும்.
அதேநேரம் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் வைப்புத் தொகைகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதனால் வெளியில் புழக்கத்திலுள்ள பணத்தில் ரூ.8000 கோடி வரை அடுத்த ஒரு மாதத்திலேயே உறிஞ்சப்பட்டு விடும், பணவீக்கமும் இரட்டை இலக்கத்திலிருந்து ஒற்றை இலக்கத்துக்கு வந்துவிடும் என ரிசர்வ் வங்கி குறிப்பிடுகிறது.

எண்கள் Vs எண்ணங்கள்!!
இந்த நிலை தொடர்ந்தால் ஆண்டு இறுதிக்குள் ரூ.50000 கோடி வரை பணத்தை உறிஞ்சிவிட முடியும். பணப் புழக்கமும் குறையும், பணவீக்கமும் கட்டுக்குள் வரும். இது நடைமுறையில் சாத்தியம்தான் என்றாலும், நாட்டின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்காது என பொருளியல் நிபுணர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

Combined Economic Measure அதாவது பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சரிசமமான பன்முக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பிரயோகிப்பது மட்டும்தான் ஆரோக்கியமான பணவீக்கத்துக்கு வழிவகுக்கும், என்கிறார்கள்.

இதற்கு quantitative measures எனப்படும் சிஆர்ஆர், ரெபோ ஆயுதங்கள் மட்டும் போதாது. Qualitative measures எனப்படும் வேறு சில சிந்தனை சார்ந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் ஒரு சேரக் கையாளுதல் அவசியம்.
இதை இப்படி விளக்கலாம்...
எல்லா கடன்களுக்கும் கண்ணை மூடிக் கொண்டு வட்டி விகித்தை உயர்த்துவது quantitative என்றால், விவசாயம் மற்றும் அத்தியாவசிய முதலீடுகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தாமல் விடுவது qualitative. ஒன்று வெறும் எண்களைச் சார்ந்தது. அடுத்தது எண்ணங்கள் சார்ந்தது!

சிமெண்ட், இரும்பு, அலுமினியப் பொருட்களின் மீதான விலைகள் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றின் விலைகளில் மாறுதல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது நடைமுறைப் பொருளாதாரத்தை சீராக வைத்திருக்க உதவும். ஆனால் வெறும் பணக்கொள்கையை மட்டுமே பயன்படுத்தி இதைச் சாதிக்க முடியாது.

உணவுப் பொருள் உற்பத்தி சார்ந்த துறைகளில் சலுகைகளையும், வட்டித் தளர்வுகளையும் அனுமதிக்கத்தான் வேண்டும். பொருளாதாரம் ஒருவித சமநிலைத் தன்மையில் இருக்க இந்த பன்முக பொருளாதார நடவடிக்கைகள் உதவும்.பொருளியல் நிபுணர்கள் கருத்து 'உடல் வீங்கிப் போயிருக்கிறதே என்று ஒரேயடியாக கொழுப்பை உறிஞ்சிவிட்டால் என்னாகுமோ அப்படி ஒரு எதிர்மறை விளைவை கடுமையான சிஆர்ஆர், ரெபோ ரேட் உயர்வு தோற்றுவித்து விடக்கூடும்.

நமக்கு கடந்த காலங்களில் அப்படிப்பட்ட நெருக்கடிகள் ஏற்படுத்தியுள்ளன. அதேநேரம் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாட்டுக் கருவிகளை தொடர்ந்து உபயோகிப்பது பணவாட்டத்துக்கும் வழி வகுத்துவிடும். இதுவும் நமக்கு கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது, என்கிறார் மாநிலக் கல்லூரியின் முன்னாள் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் பன்னீர்செல்வம்.
ஆனால் நமது நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியப் பொருளாதாரத்தை மேலும் ஒரு கடுமையான சூழலுக்கு இட்டுச் சென்று விடுமோ என்ற அச்சத்தைத் தோற்று வித்துள்ளதாகக் கூறுகிறார் பேராசிரியர் பன்னீர்செல்வம். அப்படி என்ன அறிக்கை அது?

அரசு வங்கிகள் இனி தாராளக் கடன் வழங்கும் போக்கைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கடன் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்' -இதுதான் சிதம்பரத்தின் அறிக்கை.

சுருக்கமாக, இனி கடன் தாராதீர்கள் என்ற கசப்பான சிக்னலை சர்க்கரை முலாம் தடவிய வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் அமைச்சர். கிராமப் புறங்களில் ஏற்கெனவே விவசாயிகள் மற்றும் உற்பத்தி சார் நடவடிக்கைகளுக்குக் கடன் பெறுவோர் அரசு வங்கிகளிடம் கடன் பெறுவதற்குள் விழி பிதுங்கிப் போகிறார்கள்.
நகர்ப் புறங்களில், செல்வாக்குள்ள நபர்கள் மட்டுமே அதிகக் கடன் வசதிகளை அனுபவிக்கின்றனர்.

பேராசிரியர் பன்னீர் செல்வம் பெரிதும் வலியுறுத்தும் இன்னொரு விஷயம் அரசை நடத்துபவர்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்களுக்கான செலவைக் கடுமையாகக் குறைக்க வேண்டுமென்பது.

"100 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தைத் துவக்கி வைக்க 10 கோடி ரூபாயில் ஆடம்பர விழா எதற்கு? இந்த 10 கோடிதான் பணவீக்கத்துக்கு அச்சாரமிடுகிறது. ஆனால் இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் நடந்து கொள்கின்றன.
நமது அமைச்சர்கள், அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு, தமிழ்நாட்டின் பட்ஜெட் தொகைக்குச் சமம்!
அதேபோல, நாட்டில் பொருளாதார நெருக்கடி எனத் தெரிந்தும் அரசு ஊழியர்களுக்கு எதற்காக மிக அதிக அளவு சம்பளத்தை உயர்த்துகிறார்கள். அந்த நிதிச் சுமையையும் சிஆர்ஆர் மூலம்தான் குறைக்கப் போகிறார்கள் என்றால் இந்த சம்பள உயர்வு மிகப் பெரிய கேலிக் கூத்தல்லவா...!" என்கிறார்.
கண்மூடித்தனமான பிரயோகம்!இப்போது வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு, கடன் வசதிகளும் முடக்கப்பட்டால், பாதிப்பு யாருக்கு? பொருளாதாரத்தின் அடிமட்டத் தூண்களான உணவு உற்பத்தியாளர்கள்தான்...

6 மாதங்களுக்குப் பிறகு பணவீக்கம் 7 சதவிகிதமாகி விட்டது என எண் கணக்கை ஒப்பிப்பதால் மட்டும் என்ன நன்மை வந்துவிடப் போகிறது. எனவே பணவியல் கொள்கைகளை கண்மூடித்தனமாக நம்புவதைக் குறைத்துக் கொண்டு, ஆரோக்கியமான பணவீக்க நிலை நிலவ, பன்முக பொருளாதார நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்!
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

பணவீக்கம்: சிஆர்ஆர், ரெபோ ரேட் அதிகபட்ச உயர்வு!

கிட்டத்தட்ட 12 சதவிகிதத்தைத் தொட்டுக் கொண்டு நிற்கும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் (சிஆர்ஆர்), வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தையும் (ரெபோ) இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய ரிசர்வ் வங்கி இன்று உயர்த்தியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை கணிசமாகக் குறைத்து 5 சதவிகித அளவுக்குக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விகிதங்களின்படி ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி அதாவது ரெபோ ரேட் விகிதம் இனி 50 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, 8.5-லிருந்து 9 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வங்கியும் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பின் அளவு அதாவது சிஆர்ஆர் இதுவரை 50 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வந்தது. ஆகஸ்ட் 30 முதல் அது 25 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு 8.75லிருந்து 9 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. அதேநேரம் வெளியிலிருந்து ரிசர்வ் வங்கி பெறும் ரொக்கத்துக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் (RRR – REVERSE REPO RATE) எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை.
வழக்கம்போல 6 சதவிகிதம்தான் இனிமேலும் தரப்படும். அதேபோல வங்கி விகிதமும் (BANK RATE - நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நீண்ட காலக் கடன்கள்) மாறாமல் அதே 6 சதவிகிதத்தில் நிலைத்திருக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்க அளவை 7 முதல் 5.5 சதவிகிதத்துக்குள் கொண்டு வந்துவிட வேண்டும், அதே நேரம் நாட்டின் மொத்த உற்பத்தியை 8 சதவிகித அளவில் நிலைபெறச்செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டுதான் சிஆர்ஆர் மற்றும் ரெபோ ரேட் அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இனி வங்கிகள் வழங்கும் அனைத்துக் கடன்களுக்கான வட்டி விகிதங்களும் கணிசமாக உயர்த்தப்படவுள்ளன.

இந்த வீக்கம் எப்போது குறையும் - 2

டாக்டர் எஸ்.ஷங்கர்


சீனாவின் அனுபவங்களிலிருந்து...

இந்தப் பகுதியைத் தொடருமுன் ஒரு ஷாக்கான சமாச்சரத்தை விளக்கிவிடுவது உத்தமம் என நினைக்கிறேன்.

கட்டுரையின் முதல் பகுதியில், சிஆர்ஆர் எந்த அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தேன். நமது நிதியமைச்சர் எந்த அளவு இதில் விளையாடியிருக்கிறார் என்ற உண்மையைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லாமல், உங்கள் ஊகத்துக்கே விட்டுவிட்டிருந்தேன்.

நண்பர்களும், எனது முன்னாள் வகுப்புத் தோழர்களாக இருந்து இப்போது மாநிலக் கல்லூரியின் பொருளாதாரத் துறையில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் சிலரும் தொலைபேசியில் வலியுறுத்தியதால் அந்த ஒரு விஷயத்தை மட்டும் சற்றே விளக்கிவிட்டு, அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவோம்...

ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிப்பது, மற்றும் நேற்றைய, நாளைய கடன்கள் மீதான வட்டியை அதிகரிப்பது மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முழுமையான கருவியாகிவிடாது. ஆனால் நம் நிதி மந்திரி அதைத்தான் முழுமையாக நம்புகிறார்.

சிஆர்ஆரை ஏதோ இப்போதுதான் உயர்த்தியிருப்பது போல நமக்குத் தெரிகிறது. ஆனால் கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்றே ப.சிதம்பரம் இதுகுறித்த லேசாக கோடி காட்டிவிட்டார்.

அன்றைய தேதியில் ரிசர்வ் வங்கியின் சிஆர்ஆர் 7.5 சதவிகிதம். இப்போது 8.5. ஜூலைக்குள் இது 8.75! எவ்வளவு உயர்ந்திருக்கிறது... கிட்டத்தட்ட 1.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் .75 சதவிகிதம் மக்களுக்குத் தெரியாமலேயே அல்லது அதிக ஆர்ப்பாட்டமின்றி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஆபத்து.

அதாவது நிதியமைச்சர் ஜூன் 17-ம் தேதி பாராளுமன்றத்தில் சின்னதாக ஒரு அறிவிப்பு கொடுத்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் 0.5 சதவிகிதம் சிஆர்ஆர் உயர்த்தப்பட்டுள்ளது!இதன் விளைவு இன்னும் சில தினங்களிலேயே தெரியத் தொடங்கும். என்னப்பா, 500, 1000 ரூபாய் நோட்டுக்களைக் கண்ணுல பார்க்கவே முடியலையே என்பது போன்ற முணுமுணுப்புகள் கிளம்ப ஆரம்பித்துவிடும்.

சிஆர்ஆரை உயர்த்திக் கொண்டே போனால், அதன் முடிவு?இப்போது பணவீக்கம் மாதிரி, அடுத்து பணத்தேக்கம் வந்துவிடும். நாட்டின் மொத்தப் பண சுழற்சியும் சுருக்கப்பட்டு பணம் மொத்தமும் ரிசர்வ் வங்கியில் தேங்கிப் போக பொருளாதாரம் முடங்கிப் போகும். அப்போதும் பாதிக்கப்படப் போவது நடுத்தர, ஏழை மக்கள்தான். பணக்காரர்கள் சமாளித்துக் கொள்ளலாம்.

சரி, என்னதான் செய்ய வேண்டும்?

நோஞ்சானாக இருப்பதும் ஆபத்து, வீங்கி வெடித்துப் போகும் அளவுக்குப் பருமனாக இருப்பதும் ஆபத்து. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உடலை வைத்துக் கொள்வதே ஆரோக்கியம் என்பது போலத்தான், பண வீக்கத்துக்கு எதிரான பொருளாதா நடவடிக்கைகளும் அமைய வேண்டும் என்கிறார் நவீன பொருளியலின் தந்தை எனப்படும் ஜான் மேனார்டு கீன்ஸ்.

எத்தனை அனுபவப் பூர்வமான நிஜம் கலந்த வாக்கு பாருங்கள்...

ஆனால் பொருளியலில் பிஎச்டி வாங்கிய நமது பிரதமரும் அவரது விசுவாச உதவியாளராக தன்னைக் காட்டிக் கொள்வதிலேயே குறியாகத் திகழும் ப.சிதம்பரமும் இதனை கவனத்தில் கொண்டதாகவே தெரியவில்லை.

சீனா- ஒரு அருகாமை உதாரணம்.

குறைந்தபட்சம், பொருளியல் கோட்பாடுகளை திறமையாக, மக்களின் நலனுக்கேற்ப 'அப்ளை' செய்வதில்தான் ஒரு அரசின் நிஜமான வெற்றி இருக்கிறது என்கிறார் சீன அதிபர் ஹூ ஜின்டாவ். இந்த வார்த்தையைச் சொல்ல வேண்டுமென்றால் அதற்கான அடிப்படைத் தகுதி வேண்டுமல்லவா...

இதோ சீனா என்னவெல்லாம் செய்து தன் பணவீக்கத்தைக் குறைத்தது என்பதைப் பார்ப்போம்... (சீனப் புகழ் பாடுவதல்ல நமது நோக்கம். ஒரு நாட்டின் பொருளியல் அனுபவங்களே அடுத்த நாட்டுக்குப் பாடமாகின்றன...)

அது இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த காலம்...போரில் இரு துருவமாக நின்ற நேச நாடுகள் பெரும் வெற்றிப் பெற்று, போருக்குக் காரணமான ஹிட்லர் தலையிலான அச்சு நாடுகளை உலக வரைபடத்திலிருந்தே நீக்கிவிடும் வேகத்தோடு பல தடைகளை ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீது விதித்தன.

குறிப்பாக ஜெர்மனி மீதுதான் அதிகத் தடைகள். அதன் இயற்கை வளங்களைக் கூட அந்நாட்டில் விட்டு வைக்க மாட்டோம் என கொக்கரித்து, நிலக்கரிச் சுரங்கங்களை ஒரு நாடும், தங்க வயல்களை ஒரு நாடும், மற்ற கனிமங்களை ஒரு நாடும் பெர்லினில் அமர்ந்து கூறு போட்டுக் கொண்டன.

பெரும் பணவீக்கம் மட்டும்தான் ஜெர்மனி மக்களுக்கு மிஞ்சியது. அதுவும் எப்படிப்பட்ட பணவீக்கம் தெரியும்... நாமெல்லாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு கேல்லப்பிங் வீக்கம் (குதிரைப் பாய்ச்சல்). கையில் பணமென்ற பெயரில் நிறைய காகிதங்கள். ஆனால் எந்தப் பொருளையும் வாங்க முடியவில்லை. அடுப்பெரிக்க விறகாகவும், டாய்ட்டில் பயன்படுத்தும் காகிதங்களாகவும் மாறிப்போயின ஜெர்மன் கரன்ஸி டாயிட்சே மார்க்.

நாடு பழையபடி பண்டமாற்று முறைக்கு மாறிக் கொண்டிருந்தது. நீ கோதுமை கொடுத்தால் நான் உனக்கு ரொட்டி தருவேன் என்கிற அளவுக்குப் போய்விட்டது நிலைமை.

பெர்லின் நகரில் இரு அண்ணன் தம்பிகள். அதில் மூத்தவன் போருக்கு முன்பே சொத்துகளைப் பிரித்துக் கொண்டு தனியாகப் போய் விட்டான். இளையவன் மகா குடிகாரன். குடித்துக் குடித்து பணம் முழுவதையும் காலி பாட்டில்களாக்கி வைத்திருந்தான்.

இந்தப் பெரும் பணவீக்கத்தின் போது எந்தப் பொருளையும் பணம் கொடுத்து வாங்க முடியாமல் ஜெர்மன்வாசிகள் துன்பத்திலிருக்க, இந்த குடிகாரத் தம்பி மட்டும் எப்போதும் போல சந்தோஷத்திலிருந்தான். தன்னிடமிருந்த காலி பாட்டிலகளைக் கொடுத்துவிட்டு ஃபுல் பாட்டில் வாங்கிக் குடித்து தன் சந்தோஷத்தைத் தொடர்ந்தானாம் (நன்றி – பேராசிரியர் டாக்டர் முகமது இஸ்மாயில்).

அந்த அளவு மோசமாக இருந்த ஜெர்மனியின் பணவீக்கம் அடுத்த சில ஆண்டுகளில் சீர்ப்பட்டது. எப்படி... கம்பைன்டு எகனாமிகல் மெஷர் எனப்படும் கூட்டுப் பொருளாதார நடவடிக்கைதான் காரணம்.

ஒரு நாட்டின் பொருளாதார அனுபவம்தான் அடுத்த நாட்டுக்கான பாடம்... இந்த முறை சீனா கையிலெடுத்த ஆயுதமும் இதே கூட்டுப் பொருளாதார நடவடிக்கையைத்தான். நாற்பதுகளில் ஜெர்மனி தன் துயரிலிருந்து மீள என்னென்ன செய்தார்களோ அதைத்தான் சீனா இப்போது செய்தது, செய்து கொண்டிருக்கிறது.

சீனாவின் பணவீக்கம் ஒரு கட்டத்தில் எப்போதுமில்லாத புதிய உயரத்தைத் தொட்டதை நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இதிலிருந்து தப்பிக்க, முதல் நடவடிக்கையாக, சிஆர்ஆரைத்தான் உயர்த்தியது சீனாவின் மக்கள் வங்கி (இங்கே ரிசர்வ் வங்கி மாதிரி).

ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இதை உயர்த்தவில்லை.

நுகர்வோர் கடன்களை முடக்கி வைத்தது. ஆனால் அதே நுகர்வோர் உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளுக்குக் கேட்ட கடன்களை பழைய வட்டி விகிதத்திலேயே கொடுத்தது!

புதிய, அவசியமான கட்டடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு கடன் அளித்த்து, பழைய கட்டடங்களின் விரிவாக்கத்துக்கு கடன் மறுத்தது.

ஒவ்வொரு பொருளின் உற்பத்திச் செலவும் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பதை வரையறுத்து உற்பத்தி நிறுவனங்களுக்குச் சொல்லிவிட்டது.

உதாரணம்: ஒரு செல்போனின் அடக்க விலை 1000 ரூபாய் என்றால் அதைப் பாதியாகக் குறைக்கச் சொன்னது அரசு. அது எப்படி முடியும்?

முடியும்... ஒரு பொபைல் போன் தயாரிக்க என்னென்ன மூலப் பொருட்கள் தேவை என்பதை ஆராய்ந்த ஒரு நிபுணர் குழு, பெரும்பகுதி செலவு பிடிப்பது ஆடம்பரத் தோற்றத்துக்காக வாங்கப்படும் மூலப் பொருட்கள்தான் என்பதைக் கண்டறிந்து அவற்றை நீக்கியது.

உற்பத்திச் செலவு குறைந்த அளவுக்கு, சந்தை விலையையும் குறைத்துவிட்டன நிறுவனங்கள்.

மக்களின் வாங்கும் சக்திக்கேற்ற விலைக்கே பொருட்கள் கிடைக்க ஆரம்பித்தன. இதே போல கட்டுமானத் துறையில், மூலப் பொருள்கள் உபயோகப் படுத்துவதில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியது மட்டுமல்ல, அப்படிச் செய்யப்படுகிறதா என்பதை ஒரு குழு வைத்துக் கண்காணித்தது.

இன்னொரு பக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஒரு நிலைக்குள் நிறுத்தி வைத்தது.

விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டன. வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, அது சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டது.

அரசு அதிகாரிகள், பெரும் அரசியல் பொறுப்பிலிருப்பவர்கள் அனைவருமே ஒரே மாதிரியான செலவு வரம்புக்குள் கொண்டு வரப்பட்டனர்.
ஏதோ, முதல்வன் படத்தில் அர்ஜூன் செய்த டிராமா சமாச்சாரங்கள் மாதிரி ஒரு ஃபீல் வருகிறதல்லவா... ஆனால் இது சத்தியமான உண்மை.

இன்னொரு பக்கம், உற்பத்தியல்லாத பிரிவினருக்கான வருவாயை நிலைப்படுத்துவதிலும் வெற்றி கண்டது சீனா.

நிரம்பிய ஏரியின் கரை உடையும் போது முன்பக்கம், பின்பக்கம் என அனைத்து பக்கமும் மணல் மூட்டைப் போட்டு உடைப்பச் சரிப்படுத்துவது போல...

இன்று நம் நாட்டின் ஆபத்தான வீக்கம் வற்ற வேண்டுமானால், சீனாவின் சுவடுகளைப் பின்பற்றுவதில் தவறில்லை. அங்கு பெயருக்குதான் கம்யூனிஸ அரசாங்கம். ராணுவ அளவிலேயே கம்யூனிஸ கட்டுப்பாடு நின்றுவிட்டது. பொருளாதாரம் முழுக்க மார்க்கெட் ஃபோர்ஸ் எனப்படும் டிமான்ட் - சப்ளை கைக்குப் போய்விட்டது.

ஆனால் எப்போதெல்லாம் அதை நிலைப்படுத்த வேண்டி வருகிறதோ அப்போது அரசின் தலையீடு முழுமையாக இருக்கிறது.

இரும்புத் திரை போட்ட நாடு என வர்ணிக்கப்பட்ட தொன்னூறுகளிலேயே சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் பொருளியல் துறைத் தலைவர் டாக்டர் நாகநாதன் (இன்றைய தமிழக திட்டக்குழு துணைத் தலைவர்), சொன்ன உண்மை இது.

பணவீக்கத்தில் நாடு தள்ளாட்ட நடைபோட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் அரசுக்கு வைக்கும் யோசனைகள் இதுதான்.


நன்றி.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கழகத்தில் பொருளியலில் பிஎச்டி பட்டம் பெற்றவர்)


நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

Saturday, August 9, 2008

இந்த 'வீக்கம்' எப்போது குறையும்?

டாக்டர் எஸ்.ஷங்கர்

விண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்டாவியுடன் சேர்த்து தூக்கம் கண்களைச் சுழற்றும்.

அத்தனைச் சிக்கல் கொண்ட வறட்டுச் சமாச்சாரம்தான், ஆனால் அலுத்துக் கொள்ளாமல் தொடருங்கள்.

காரணம் இதில்தான் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையும் இருக்கு!

எப்போதெல்லாம் நாட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கிறதோ அப்போது விலைகள் கட்டுக்கடங்காமல் போகும். அதிகரிக்கும் பணப் புழக்கத்துக்கேற்ப நாட்டில் பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு (production and supply) இல்லாத நிலையில் பொருட்களின் விலை ஒன்றுக்குப் பத்து மடங்காகிறது. இதைத்தான் பணவீக்கம் என்கிறோம்.

பங்குகள் மீதான யூக வாணிபம், குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வது, அதன் தொடர்ச்சியாக மற்ற பொருட்களின் விலை உயர்வது எல்லாமே இந்த அளிப்புக்கும் தேவைக்கும் இடையே ஏற்படும் இடைவெளியைப் பெரிதாக்கி பணவீக்கத்தை வெடிக்குமளவுக்குக் கொண்டு போய்விடுகின்றன.

இந்தியாவில் ஏற்கெனவே 7.14 சதவிகிதம் வரை இருந்த பணவீக்க அளவை, பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றியதன் மூலம் மட்டுமே மேலும் 3 சதவிகிதம் உயர்த்தியது மாதிரி!

இது ஒரு எளிய விளக்கம். இதற்கு மார்ஷல்ஸ், கீன்ஸ், மார்க்ஸ் என பல்வேறு அறிஞர்களின் விளக்கங்களுக்குப் போனால் விடிந்துவிடும். அதனால் அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவோம்.

எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

விர்ரென்று ஏறிக் கொண்டேயிருக்கும் பணவீக்கத்தைக் கொஞ்சமாவது கட்டுக்குள் கொண்டுவர, மத்திய ரிசர்வ் வங்கிதான் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அரசின் பணக் கொள்கைகளை வகுப்பதும் நேரம் பார்த்து திறம்பட செயல்படுத்துவம் ரிசர்வ் வங்கியின் கையில்தான் உள்ளது.

ஆனால் அந்த ரிசர்வ் வங்கியிலும் அரசியல் விளையாடிய ஆட்டம் இருக்கிறதே... வெளியே சொன்னால் கேவலம். சி.ரங்கராஜன் கவர்னராக இருந்த காலம் வரை ரிசர்வ் வங்கிக்கு தெளிவான பணவியல் கொள்கைகளை நமது அரசு வகுத்துக் கொடுக்கவே இல்லை அல்லது வகுத்துக் கொள்ள விடவும் இல்லை என்பதை வெளியில் சொன்னால் வெட்கக் கேடு!

இதைப் பின்னாளில் அவரே ஒரு புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

விஷயத்துக்கு வருவோம்...

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் உள்ள முதல் ஆயுதம் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆரை அதிகரிப்பது.

இந்த ஆயுதத்தைத்தான் இப்போது கையிலெடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. அது என்ன ரொக்க இருப்பு விகிதம்? ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒவ்வொரு வணிக வங்கியும் குறிப்பிட்ட அளவு ரொக்கத்தை ரிசர்வ் வங்கியில் இருப்பாக வைத்துக் கொண்டுதான் தனது வர்த்தகத்தைக் கையாள வேண்டும்.

அதைத்தான் ரொக்க இருப்பு விகிதம் என்கிறார்கள்.

அரசின் பணவியல் கொள்கையில் இதற்கு மிக முக்கிய இடம் உண்டு. பணப் புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும், வங்கிகள் அளிக்கும் கடன்களைக் கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த நடவடிக்கை உதவும். இந்த ரொக்க இருப்பு விகிதத்தை ஆண்டுக்காண்டு பொருளாதார நிலைமைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் அதிகாரம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சொல்லப்போனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு வசமுள்ள ஒரே சட்டப்பூர்வ ஆயுதம் இந்த ரொக்க இருப்பு விகித கட்டுப்பாடுதான்.

எவ்வளவு உயர்த்தலாம்?

அதற்காக வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி ஒரேயடியாக உயர்த்திவிட முடியாது.

உதாரணம்: ஒரு வங்கி ரூ.20000 கோடி வரை வர்த்தகத்தைக் கையாளுவதாகக் கொள்வோம். அதில் 1800 கோடி வரை ரிசர்வ் வங்கியில் ரொக்க இருப்பு வைத்திருக்க வேண்டும்.

ஒரு வேளை, திடீரென பணவீக்கம் அதிகரிக்கும் போது, ரிசர்வ் வங்கி இந்த ரொக்க இருப்பை 2300 கோடியாக அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது வங்கி மூலம் வெளியில் செல்லும் பணத்தில் ரூ.500 கோடி வரை கட்டுப் படுத்தப்படுகிறது.

ஒரு வங்கி மூலம் மட்டுமே இந்த அளவு பணம் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் (கிளைகள் அல்ல) மூலமும் கட்டுப்படுத்தப்படும் பணத்தின் அளவு எவ்வளவு பாருங்கள்...

இப்போது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?

மத்திய ரிசர்வ் வங்கி இம்முறை முன்தேதியிட்டு 8.75 சதவிகிதமாக சிஆர்ஆரை உயர்த்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 26 முதல் 5 கட்டங்களாக புதிய சிஆர்ஆர் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

ஏப்ரல் 26 முதல் மே 10 வரையிலான 15 நாட்களுக்கு 0.25 சதவிகிதம், மே-11 முதல் 25-ம் தேதி வரையுள்ள காலகட்டத்துக்கு 0.25 சதவிகிதம் என இரண்டரை மாதங்களுக்கு மொத்தம் 1.25 சதவிகித அளவுக்கு ரொக்க இருப்பு விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 7.5 சதவிகிதத்திலிருந்து 8.75 சதவிகிதமாக சிஆர்ஆர் உயர்கிறது.

பொதுவாக இம்மாதிரி நேரங்களில் மத்திய அரசு இன்னொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். அது பொருட்களின் உற்பத்தியையும், அளிப்பையும் அதிகரிப்பது மற்றும் அநாவசியச் செலவுகளைக் குறைப்பது. ஆனால் நமது அரசியல்வாதிகள் அதற்கு எந்த அளவு ஒத்துவருவார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே.

இந்திய அரசால் இப்போதைக்கு உற்பத்தியை அதிகரிக்க முடியாது. பணப் புழக்கத்தின் அளவை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். அதற்கு தோதான ஆயுதம்தான் வங்கிகள் மூலம் தாராளமாகப் பணம் பாய்வதைத் தடுத்து நிறுத்துவது.

சரி, இந்த ரொக்கத்தைக் கட்டுப்படுத்திவிட்டால் பொருளின் விலை குறைந்து விடுமா...?

குறைய வேண்டும் என்பது பொருளாதார விதி. ஆனால் சத்தியமாகக் குறையாது என்பது நடைமுறை!பின்னே பணவீக்கம் எப்படிக் கட்டுக்குள் வரும்?பொதுமக்களின் வாங்கும் சக்தியைக் கணிசமாகக் குறைப்பதன் மூலமும் விலையைக் குறைக்க முடியுமல்லவா...

ரிசர்வ் வங்கி, ரொக்க இருப்பை அதிகரித்தால் வங்கிகள் தங்கள் பங்குக்கு, வட்டி விகிதத்தை தாறுமாறாக உயர்த்தும். வீட்டுக் கடன்கள், நுகர்வோர் கடன்கள் போன்றவற்றுக்கான முன்னுரிமை குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும். அல்லது, உயர்ந்துவிட்ட வட்டியைப் பார்த்து நாமாகவே கடன் வாங்குவதைக் குறைத்துக் கொள்வோம்.

இன்றைக்கு மாதச் சம்பளக்காரர்களின் வீடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் எல்லாம் சம்பளப் பணத்தில் மட்டுமே வாங்கியவையென்று கூற முடியுமா... பல்வேறு நுகர்வுக் கடன்கள்தானே வண்ணமிகு பயன்பாட்டுப் பொருட்களாக வந்திறங்குகின்றன.

இந்த கடன் வசதி நின்று போனால் தானாகவே வாங்கும் சக்தியும் நின்றுபோகும் அல்லவா... அப்போது பொருட்களின் அளிப்பு, வெளியில் புழங்கும் பணத்தின் அளவுக்கேற்ப சமநிலைப்படும். விலையும் ஒரு கட்டுக்குள் வரும்.

இருப்பவர் வாங்குவார். இல்லாதவர் அதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி காலத்தை ஓட்டுவார்.

யாருக்கு பாதிப்பு?

மைக்ரோசாஃப்ட், இன்ஃபோஸிஸ், எச்சிஎல் போன்ற பெரும் பணக்கார ஐடி நிறுவன ஊழியர்களை இந்தப் பண வீக்கமோ, பணமந்தமோ அல்லது வங்கிகள் உயர்த்தப் போகும் வட்டி விகிதமோ ஒன்றும் செய்து விடாது.

சொல்லப்போனால் இந்தப் பண வீக்கத்தைக் காரணம் காட்டி அவர்களுக்கு மேலும் 20 முதல் 40 சதவிகிதம் வரை சம்பள உயர்வு கிடைத்துவிடும். ஆனால் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நிலைதான் படு பாதாளத்துக்குப் போகும்.

உற்பத்தியாளன் என்று சொல்லப்படும் அடித்தட்டு வர்க்கம் தன் தேவையைச் சுருக்கிக் கொள்ளும் அவலமும், 23 வயது ஒயிட் காலர் ஐடி இளைஞர்கள் ஆயிரங்களை அள்ளி இறைத்து தங்களுக்கு வேண்டியதை அனுபவிக்கும் போக்கும் அதிகரிக்கும்.

பொருளாதார- சமூகக் குற்றங்கள் பெருகவும் அது வழிவகுக்கும். பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிப்பது ஒரு வகை முதலுதவி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்...

ஆனால் இதுவே நிரந்தரத் தீர்வல்ல.

நிரந்தரத் தீர்வு நிறைய இருக்கு... இந்தியாவிலாவது 11.05 சதவிகிதம். சீனாவில் ஒருகட்டத்தில் பணவீக்கத்தின் அளவு மிக மிக அதிகம், அதாவது 15 சதவிகிதம். ஆனால் அவர்களது பொருளாதாரம் சரிந்து விழுந்து விடவில்லை. கடந்த ஜனவரி மாதம் விண்ணுக்குப் போன விலைகள் இன்று மெல்ல தரையைத் தொடும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

அது எப்படி... அடுத்த பகுதியில்...!

நன்றி- தட்ஸ்தமிழ்