Saturday, August 30, 2008

அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா!

டெல்லி: அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பணிகளை வெளியாட்களுக்குத் தரும் அவுட் சோர்சிங் முறையைக் கைவிட வேணடும். அமெரிக்கர்களையே தொழில் நிறுவனங்களில் பயன்படுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி அதிபர் தேர்தல் வேட்பாளர் ஓபாமா கூறியுள்ளார்.

சமீபத்தில் ஓபாமா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, அமெரிக்க நிறுவனங்கள் அவுட் சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். அமெரிக்கர்கள் மயமாக தொழில் நிறுவனங்கள் இருக்க வேண்டும்.

நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க கம்பெனிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை ரத்து செய்வேன். அமெரிக்க வேலை வாய்ப்புகள் வெளிநாட்டினரிடம் ஒப்படைக்கப்படுவதை முற்றிலுமாகத் தடுப்பேன்.

அவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.

ஓபாமாவின் இந்தப் பேச்சு இந்திய தொழில் துறையினரை குறிப்பாக ஐடி துறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. காரணம் இன்றைக்கு இந்தியப் பொருளாதார வளரச்சியில் இந்த அவுட் சோர்சிங் வருமானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. என்றாலும் ஒபாமாவின் இந்தப் பேச்சுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அண்ணா நூற்றாண்டு விழா: ரூ.1-க்கு கிலோ அரசி!!

சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ.1க்கு விற்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒன்றாக,நியாய விலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

அதேபோல, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.2 வீதம் 20 கிலோ அரிசி மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா நூற்றாண்டு விழா தொடக்க நாளான செப்டம்பர் 15 முதல் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரையும், தமிழக அரசையும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வேண்டிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கிலோ அரிசி ரூ.1க்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைக்காரர்கள் பயனடைவார்கள்.

இது குறித்து இன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ. 400 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றார்.திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி கிலோ அரிசி ரூ.2க்கு தற்போது வழங்கி வருகிறது.

இந்நிலையில் விலையை மேலும் குறைத்து ரூ.1க்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி குறித்து வதந்தி:

முன்னதாக முதல்வர் கருணாநிதி குறித்து சென்னையின் சில இடங்களில் இன்று வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் இன்று சிலர் முதல்வர் கருணாநிதி குறித்து வதந்தி பரப்பினர். இதையடுத்து திமுக கொடிக் கம்பங்களில் இருந்த கொடிகளை அரைக் கம்பத்திலும் பறக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் அது வதந்தி என்று தெரிய வந்ததால் உடனடியாக கொடிகள் சரியான முறையில் பறக்க விடப்பட்டன.

சிங்கூரில் டாடா நானோ பணிகள் முடங்கின!

சிங்கூர்: திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டு வரும் தொடர் தர்ணா போராட்டத்தால் மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையில் 2-வது நாளாக பணிகள் முடங்கியது. இதனால் நானோ தொழிற்சாலையில் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
சிங்கூரிலிருந்து நானோ தொழிற்சாலையை மாற்றக் கோரியும், விவசாயிகளிடமிருந்து வாங்கிய 400 ஏக்கர் நிலத்தை திரும்பத் தரக் கோரியும், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சிங்கூரில் காலவரையற்ற தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.
இதனால் தனது தொழிற்சாலைக்கு வரும் தொழிலாளர்களையும், பணியாளர்களையும் த்ரிணாமூல் தொண்டர்களும், உள்ளூர் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலரும் தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதனால் அவர்களால் வேலைக்கு வர முடியவில்லை. நேற்று முதல் நானோ தொழிற்சாலையில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இன்றும் எந்தப் பணியும் நடைபெறவில்லை.
இப்போதைக்கு பணிகளைத் தொடங்க உகந்த நிலை சிங்கூரில் இல்லை என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டாடா நிறுவனத்தின் நானோ தொழிற்சாலையை தஙகள் மாநிலத்துக்கு மாற்றிவிடுமாறு பல்வேறு மாநில முதல்வர்களின் அழைப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

Friday, August 29, 2008

பணிப் பெண்கள், இன்டர் நெட்: ரயில் பயணங்கள் இனி அலுக்காது!

புதுடெல்லி : இனி ரயில்களிலும் பணிப் பெண்கள், நொறுக்குத் தீனி வழங்கள், இண்டர்நெட், தொலைக்காட்சி என விமானத்தை விட கூடுதல் வசதிகள் வர உள்ளன.

ரயில் பயணங்களை இனி விமானப் பயணத்தைவிட மேம்பட்டதாக மாற்ற ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ரயில்களில் பயணிகளுக்குச் சேவை செய்ய பணிப் பெண்களை நியமிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

ரயில்வே அமைச்சகமும் விரைவில் இதற்கு ஒப்புதல் கொடுக்கப் போகிறது. செப்டம்பர் மாதத்திலிருந்தே சதாப்தி, கஞ்சன் கன்யா எக்ஸ்பிரஸ் போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் மட்டும் பணிப் பெண்கள் அமர்த்தப்படுவர். அவர்கள் பயணிகளுக்குத் தேவையான காபி, டீ, நொறுக்குத் தீனி மற்றும் உணவு வகைகளை வழங்குவர்.

இதமான மெல்லிய இசையுடன், ரயில்களில் இண்டர்நெட், டிவி பார்க்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த வசதிகள் சாதாரண வகுப்பு பயணிகளுக்கும் கிடைக்கும் விதத்தில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நீல நிற கால் அங்கி மற்றும் வெள்ளை நிற சட்டை மற்றும் மேல்சட்டைகள் (பிளேசர்கள்) அணிந்து ரயில் பணிப் பெண்கள் சேவை செய்வர்.
உலகிலேயே இந்திய ரயில்வேயில்தான் முதன்முறையாக இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.

இது குறித்து ரயில்வே செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் மிகப் பெரிய துறையான இந்திய ரயில்வேயை சிறந்த முன்னோடி போக்குவரத்தாக மாற்றவே இந்த மேம்பட்ட சேவைகளை வழங்கவிருக்கிறோம்.

முதலில் 'கஞ்சன் கன்யா எக்ஸ்பிரஸ்' மற்றும் 'மேற்கு வங்க எக்ஸ்பிரஸ் ரயில்' களில் இத்திட்டம் அறிமுகமாகும். செப்டம்பர் 20 முதல் இண்டர்நெட், தொலைக்காட்சி வசதி அறிமுகப்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரவ் ஷாவின் ரூ.100 கோடி கனவு!

கிழக்கு கடற்கரைச் சாலையில் நீரவ் ஷாவின் கனவு நகரம்!

கோலிவுட்டின் இன்றைய ஹாட் ஒளிப்பதிவாரான நீரவ் ஷா சொந்தமாக ஒரு மிகப் பெரிய திரைபேபட நகரை ரூ.100 கோடி செலவில் உருவாக்கப் போகிறார்.

ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு இணையாக இந்த திரைப்பட நகரை சென்னையில் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இற்ஙகியுள்ளார் நீரவ் ஷா.
இதற்காக ரூ.100 கோடியில் அவர் உருவாக்கியுள்ள திட்டத்துக்கு அரசுத் தரப்பிலும் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்தத் தொகை தோராயமானதுதான், போகப்போக அதசு இருமடங்காகனாலும் வியப்பதற்கில்லை, என்கிறார்கள்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த ஸ்டுடியோவில் ஹாலிவுட்டில் உள்ள அத்தனை நவீன வதிகளும் செய்து தரப்படும் என்கிறார் நீரவ் ஷா.

ஒளிப்பதிவாளர்களின் சிரமத்தை மிகவும் உணர்ந்தவர் என்பதால், ரிமோட் மூலம் இயங்கக் கூடிய நிரந்தர ஒளிவசதியை (காட்சிக்குத் தேவையான ஒளி வசதியை எந்த நேரத்திலும் பெறமுடியும்!) இந்த ஸ்டுடியோவில் அமைக்கவிருக்கிறாராம் நீரவ் ஷா.
இந்த ஸ்டுடியோவுக்கான பூமி பூஜை செப்டம்பர் முதல் வாரத்தில் போடப்படவுள்ளது.

சென்னை நகருக்குள்ளேயே ஏற்கெனவே அரசுக்குச் சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட நகர் இருந்தாலும், போதிய பராமரிப்பின்றி தற்போது மூடப்பட்டுக் கிடக்கிறது அந்த அருமையான நகரம். இதனால் தமிழ்ப் படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் நடக்கின்றன.
இந் நிலையை மாற்றி, பல மொழிகளில் ஏராளமான படங்கள் உருவாகும் சென்னையில் அனைத்து வசதிகளும் நிறைந்த நிரந்தரமான ஸ்டுடியோ அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் நீரவ் ஷா.
நல்ல முயற்சி, திருவினையாகட்டும்!

ஏற்கெனவே திருமணமான பாய் பிரண்டை மணக்கிறார் ஷில்பா!

விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்துள்ளார் ஷில்பா ஷெட்டி.
இந்த முறை வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், தனது வருங்காலக் கணவர் யார் என்பதையும் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திருமணமாகி மனைவியுடன் வசிக்கும் தனது நீண்ட நாள் பாய் பிரண்ட் ராஜ் குந்த்ரா என்பவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் ஷில்பா.
இந்திப் படவுலகில் மார்க்கெட் இழக்கும் தருணத்தில் பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார் ஷில்பா ஷெட்டி. பல கோடி ரூபாய் பரிசுகளும் புகழும் அவருக்குக் குவிந்தன. கிட்டத்தட்ட உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யாவுக்கு நிகராகப் பேசப்படும் நடிகையாகி விட்டார் ஷில்பா.

இப்போது அவர் கைவசம் இந்திப் படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் வாய்ப்புகளும் நிறைய உள்ளன. விரைவில் புதிய ஜேம்ஸ்பாண்ட் படமான குவாண்டம் ஆப் சோலேஸில் இரண்டு நிமிட சிறப்புக் காட்சியில் தோன்றுகிறார் ஷில்பா.

பிக் பிரதர் நிகழ்ச்சியின் இந்திய வடிவமான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பும் ஷில்பாவிடமே வழங்கப்பட்டுள்ளது.
இத்தனைப் புகழ், பணம் சேர்ந்த பின் வாழ்க்கையில் செட்டிலாவதுதானே முறை?

அந்த முயற்சியில்தான் ஷில்பாவும் இறங்கியிருக்கிறார்.
எப்போது திருமணம் என்று கேட்டால், இப்போது என்ன அவசரம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி வந்தவர், இப்போது அடிக்கடி திருமணம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

ராஜ் குந்த்ரா என்பவரைத்தான் ஷில்பா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம். ஷில்பாவின் நெடு நாள் பாய் பிரண்ட் இந்த ராஜ் குந்தர். அதுமட்டுமல்ல... இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கவிதா என்ற மனைவியும் உள்ளார்.

"தற்போது என் கைவசமுள்ள பொறுப்புகளை முடித்துத் தரவே எனக்கு குறைந்த்து ஒரு வருடம் ஆகும். அதற்கப்புறம் கல்யாணத்துக்கு 6 மாதங்களாவது டைம் வேண்டாமா... ஆனால் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொண்டு, இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு, என்கிறார் ஷில்பா.

எல்லாம் சரிதான், இந்தக் கல்யாணத்துக்கு ராஜ் குந்தரின் மனைவி ஒப்புக் கொள்வாரா?

பங்கு வர்த்தகத்தில் மோகன் லால்!

கொச்சி: நடிப்பில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் தன்னை கேரளாவின் சூப்பர் ஸ்டார் என்று நிரூபிக்க முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது பிரபல நடிகர் மோகன்லால்.

ஓட்டல் பிஸினெஸ், சினிமா திரையரங்கங்கள், மல்டிபிளக்ஸ்கள் என தனது வியாபார எல்லைகளை விஸ்தரித்து வந்த அவர், இப்போது பங்கு வர்த்தகத்திலும் தீவிரமாக இறங்கிவிட்டார்.


இதற்காக, பேபி மரைன் எக்ஸ்போர்ட்ஸ், பெடக்ஸ் செக்யூரிட்டீஸ், சுமார்ட் பைனான்சியல் தாக்கர் குரூப் மற்றம் தொழிலதிபர் எஸ்.எம்.ஷெக்டே போன்றோருடன் கைகோர்த்துள்ளார்.


இதற்காக மோகன் லால் துவங்கியுள்ள நிறுவனம் ‘ஹெட்ஜி ஈகுவிட்டீஸ்’ . இந்த நிறுவனம் விரைவில் தன் செயல்பாடுகளை துவக்க விருக்கிறது. கேரள அரசின் ஜியோஜித் பைனான்ஸூக்கு நிகராக இந்நிறுவனத்தின் வணிகத்தைப் பெருக்கும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார் மோகன்லால்.
எனவேதான் கேரளா முழுவதும் 15 கிளைகள் திறக்கப்பட உள்ளதோடு, தமிழகம், ஆந்திராவிலும் கூட கூடுதலாக கிளைகள் திறக்க முடிவெடுத்துள்ளார் மோகன்லால்.


ஜியோஜித் போலவே, பங்கு வர்த்தகம், பரஸ்பர நிதி உட்பட பல வகையான நிதி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு ‘ஹெட்ஜி ஈகுவிட்டீஸ்’ வழங்க உள்ளது.


இந்திய அளவில் பங்கு வர்த்தகத்தில் இவ்வளவு பிரமாண்டமான திட்டங்களுடன் ஈடுபடும் முதல் நடிகர் மோகன்லால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

என்.டி.ஆர். பாணியில் சிரஞ்சீவியும் ரதயாத்திரை!

ஐதராபாத்: மறைந்த என்.டி.ராமாராவ் பாணியில் சமீபத்தில் பிரஜா ராஜ்யம் கட்சி தொடங்கிய சிரஞ்சீவியும் விரைவில் ரத யாத்திரை துவங்குகிறார். தனது கட்சிக்கு மக்களிடம் ஆதரவு கேட்டு, ஆந்திரா முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரத யாத்திரை செல்கிறார்.

இதற்கான திட்டங்களை அவருடைய உதவியாளர்களும், பல கட்சிகளில் இருந்து அனுபவம் பெற்று தற்போது சிரஞ்சீவி கட்சிக்கு வந்துள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களும் வகுத்து வருகிறார்கள்.

ஆந்திர சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் ஆந்திராவின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து மக்கள் ஆதரவைத் திரட்டிவிட வேண்டும் என்பது சிரஞ்சீவியின் நோக்கம்.
இந்த ரத யாத்திரையே சிரஞ்சீவியின் தேர்தல் பிரசாரமாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

53 வயதான சிரஞ்சீவி, கபு சமுதாயத்தை சேர்ந்தவர். ஆந்திராவில் 100 சட்டப்பேரவை தொகுதிகளில் இந்த சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். எனவே, முதல் கட்டமாக இந்த தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்ய உள்ளார்.

அடுத்த கட்டமாக, விஜயசாந்தி குறிவைத்துள்ள தெலுங்கானாவில் உள்ள 100 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார் என அவரது கட்சி வட்டாரங்கள் தகவல் பரப்பி வருகின்றன.

மறைந்த என்.டி.ராமராவ் 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி 9 மாதங்களில் ஆட்சியைப் பிடித்தார். பின்னர் அவரது ஆட்சியை மூத்த அமைச்சர் பாஸ்கர ராவ் உடனிருந்து கவிழ்த்தார்.

இதைத் தொடர்ந்து மக்களிடம் நீதி கேட்டு என்.டி.ராமராவ் மாநிலம் முழுவதும் வேனில் பிரசார பயணம் மேற்கொண்டார். இந்த பிரசார பயணத்துக்கு சைதன்ய ரதயாத்திரை என்று பெயர் சூட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் என்டிஆர். அதே பிரசார பாணியை சிரஞ்சீவியும் பின்பற்ற முடிவு செய்துள்ளார்.

பணவீக்கம் 0.23 சதவிகிதம் குறைந்தது!

உணவு அல்லாத உற்பத்திப் பொருட்களின் விலை யில் ஏற்பட்டுள்ள திடீர் விலைக் குறைவு காரணமாக பணவீக்கம் 0.23 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் முடிவடாந்த வாரத்தில் பணவீக்கத்தின் அளவு 12.63 சதவிகிதமாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச பணவீக்க அளவு இது.
இந்த வாரம், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், மற்ற 30 முக்கியப் பொருட்களின் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. கனிமப் பொருட்கள், எரிபொருள், மின்சாரம், எண்ணெய், உலோகமல்லாத கனிமங்கள் ஆகியவற்றின் விலை எதிர்ப்பார்ப்புக்கு மாறாக குறைந்து காணப்பட்டது.

இதன் விளைவாக பணவீக்கமும் 0.23 சதவிகிதம் குறைந்து 12.40-க்கு வந்திருக்கிறது.
இதுகுறித்து நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகையில், இது உண்மையில் மிக நல்ல அறிகுறி. இப்போதுதான் ஓரளவு நிம்மதியாக உணர்கிறேன். வரும் நாட்களில் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிடும் என நம்புகிறேன், என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் போக்கு தற்காலிகமானது என்றும், பணவீக்கம் 14 புள்ளிகள் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் கூறியது நினைவிருக்கலாம்.
உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களில் ஏற்படக்கூடிய விலைக் குறைவுதான் பணவீக்கத்தின் போக்கை தீர்மானிக்கும் நிஜ காரணிகள். அதில் ஒரு நிலைத் தன்மை வரும்வரை இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் தொடரும், என்கிறார் ரங்கராஜன்.
பணவீக்கத்தின் போக்கை மேலும் குறைக்க வங்கி வட்டி, மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் உயர்த்தும் திட்டத்தில் உள்ளது ரிசர்வ் வங்கி.

Monday, August 25, 2008

இந்தியா - 62: பொருளாதார சுதந்திரம் எப்போது?

டாக்டர் எஸ். ஷங்கர்
இவர்கள் வல்லரசாகப் போகிறார்களா... சும்மா ஜோக் பண்ணாதீங்க. தங்களுக்குள் இருக்கிற ஜாதியையும் வறுமையையும் ஜெயிக்க முடியாத இவர்கள் என்றைக்கு உலகை ஜெயிப்பது?
– 2020-ல் இந்தியா உலகின் வலிமை மிக்க வல்லரசாகிவிடும் என்ற டாக்டர் அப்துல் கலாமின் கனவைக் கேலி செய்து இங்கிலாந்தின் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்ட ஒரு கட்டுரையின் சாரம் இதுதான்!
ஆனால் கங்காரு தன் குட்டியைச் சுமப்பது போல, ஒரு பக்கம் தன் வறுமையைச் சுமந்து கொண்டே, லஞ்சம், வகுப்புவாதம், மொழி வெறி, ஜாதித் துவேஷம், எப்போதும் வளர்ச்சிக்கு நந்திகளாய் திகழும் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் என எக்கச்சக்க ஸ்பீட் பிரேக்கர்களைத் தாண்டி இன்று உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கிறது இந்தியா.

அப்படியென்றால் நாம் உண்மையிலேயே வளர்ந்து விட்டோமா... நாம் வளர்ந்துவிட்ட மாயம் நமக்கே புரியாமல்தான் இருக்கிறோமா...
இந்தியப் பொருளாதாரத்தின் நிஜமான வலிமை என்ன?

ஒரு சின்ன பிளாஷ்பேக்...
டாக்டர் ராபின்ஸன் மற்றும் எம்.என். ராயின் வார்த்தைகளில் சொல்வதானால், கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனத்தை பிரிட்டிஷ்காரர்கள் தொடங்கிய 17-ம் நூற்றாண்டில், அமெரிக்கா என்ற தேசமே பழங்குடியினரின் பூமியாய் இருந்த காலத்தில், உலகின் மொத்த உற்பத்தியில் பிரிட்டனின் பங்கு கிட்டத்தட்ட 2 சதவிகிதம். இந்தியாவின் பங்கு 22 சதவிகிதம். (அட, நாமதான் வல்லரசு அன்றைக்கு!)
இத்தனைக்கும் அன்று இந்தியா ஒன்றுபட்ட தேசமல்ல. 700க்கும் மேற்பட்ட சிற்றரசுகள், சுதந்திர சமஸ்தானங்கள் மற்றும் நிஜாம்களாக இருந்தது. அப்படி பிளவுண்டு கிடந்த தேசத்தின் பொருளாதார வளத்தை மொத்தமாக கணக்கெடுத்துச் சொன்னவரும் ஒரு பிரிட்டிஷ் அதிகாரிதான். அந்தப் புள்ளி விவரங்கள்தான் இந்தியாவின் மீது பிரிட்டிஷ்காரர்களின் பிடி இறுகக் காரணமாகிவிட்டது.

அடுத்து வந்த 100 ஆண்டுகளில் பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் உலகப் பங்களிப்பு 9 சதவிகிதமாக உயர்ந்தது. இந்தியா பின்னடைந்த நாடுகளுள் ஒன்றாக மாறிப்போனது.
பெருளாதார வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்த தேசம் பிற்போக்கு சக்திகளின் பிடிக்குள் போய்விட, மதங்களும் ஜாதீயமும் பொருளாதாரத்தின் வேரறுத்து, வளர்ச்சியை ஒற்றை இலக்கத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டன... போகப்போக உலகின் குப்பைத் தொட்டியாகி வறுமை, நோய்களின் தேசமாக மாறிப்போனது...’
- எத்தனை சத்தியமான வார்த்தைகள்!
ஜனநாயகம் இப்போது வேண்டாம்!
நேரு, இந்திராவின் காலத்தில் பொருளாதாரம் முழுக்க முழுக்க கிராமங்களை மட்டுமே பிரதானப்படுத்தியபடி நகர்ந்தது. அவர்களின் காலத்தில் வளர்ச்சிக்கான முயற்சிகள் பெருமளவு மேற்கொள்ளப்பட்டன என்பதை விட SURVIVAL FACTORS-க்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.
குற்றுயிரும் குலையுயிருமாக வந்த இந்தியப் பொருளாதாரத்தை உயிரோடு வைத்துக் கொள்வதில் நேரு மிகுந்த அக்கறை காட்டினார். இந்திராவோ பொருளாதாரத்தோடு சேர்த்து தன் அரசியலையும் உயிருடன் வைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருந்தது.
இதனால்தான் ஒரு கட்டத்தில், இந்தியாவுக்கு மக்களாட்சி முறை பொருந்தாது என அவர் முடிவு செய்து அதை செயலிலும் காட்ட முயன்று தோற்றார் (ஏதாவது ஒரு பக்கத்திலாவது முழுமையாக எதிர்ப்புகளே இல்லாமல் இருந்தால், என்னால் இந்தியாவில் பல மாறுதல்களைக் கொண்டுவர முடியும் – பிரதமர் இந்திரா காந்தி, 1975).
‘இந்தியா போன்ற பின்தங்கிய, விழிப்புணர்வற்ற தேசத்துக்கு கொஞ்சகாலம் சர்வாதிகாரமே சிறந்தது. சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி வலுவான பொருளாதாரத்தை ஏற்படுத்திய பிறகு, ஜனநாயகத்தைக் கொண்டுவரலாம்’ என்ற Hardliner சஞ்சய் காந்தியின் யோசனைகள் இந்திராவுக்கும் சரியாகவே தோன்றின அன்றைக்கு.

இந்த முடிவுக்கு அவர் வர இன்னொரு முக்கியக் காரணம், அடுத்தடுத்து இரு ஐந்தாண்டுத் திட்டங்களில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது.
ஒரு குழந்தையை ராணுவக் கட்டுப்பாட்டோடு வளர்த்து பின்னர், சாதாரண வாழ்க்கைக்குத் திருப்புவது ஒரு வளர்ப்பு முறை.
வறுமை, பசி, வன்முறை, நிச்சயமற்ற நிலை போன்ற முரட்டுச் சூழலில் வளர்த்தெடுப்பது ஒரு முறை.
இந்திரா காந்தி இந்தியப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க விரும்பியது முதல் சூழலில். ஆனால் தன் முயற்சிகள் தோற்றதைப் பார்த்த பிறகுதான் போக்கை மாற்றிக் கொண்டார். இந்தியப் பொருளாதாரம் கடுமையான இந்த இரண்டாவது சூழலிலேயே வளரட்டும் என விட்டுவிட்டார்.
விளைவு, 5-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் வெற்றி கண்டோம். பசுமைப் புரட்சியால், உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவும் பெற்றோம்.

இது ராஜீவ் போட்டுக்கொடுத்த ரூட்!
சுதந்திர இந்தியாவின் சிற்பி என நேருவைப் புகழந்தாலும், நவீன இந்தியாவின் சிற்பி என்னமோ ராஜீவ் காந்திதான். இந்த வாதம் உங்களுக்கு சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். ராஜீவ் தன் ஆட்சிக் காலத்தின் இறுதி நாட்களில் செய்த தவறுகள், அவரது அரசியல் அணுகுமுறை குறித்த விமர்சனங்கள் இங்கே வேண்டாம்.
அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் இன்றைய பொருளாதார வளர்ச்சி (மற்றும் பணவீக்க நெருக்கடி) இரண்டுக்குமே ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ராஜீவ் காந்திதான்.
அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்கள்.
இன்று உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் டாப் 10 நாடுகளுள் நாமும் ஒன்றாக மாறியிருக்கிறோம்.

கனவு மெய்ப்பட...
ராஜீவ், விபி சிங், நரசிம்மராவ், வாஜ்பாய் என பிரதமர்கள் மாறினாலும் பொருளாதார வளர்ச்சிக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் போராட்டத்துக்கு நடுவே வளர்ந்த பொருளாதாரம் என்பதால் எந்தத் தடுமாற்றத்தையும் தாங்கும் சக்தியைப் பெற்றுள்ளோம்.
‘பொக்ரான் அணு சோதனை – இந்தியா மீது பொருளாதாரத் தடை’ அதையும் தாங்கிக் கொண்டோம். அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் மேலும் சில தடைகள், அதையும் தாங்கினோம். காட் ஒப்பந்தத்தில் இந்தியாவை கொண்டுபோய் வகையாகச் சிக்க வைத்தார்கள், அதையும் சமாளிக்கிறோம். ஐஎம்எப், உலக வங்கி இரண்டும் கழுத்துக்கு வைத்த கத்திகளிலிருந்தும் தக்க நேரம் பார்த்துத் தப்பித்துக் கொண்டோம்.
இடையில் ஓயாத மதச் சண்டைகள், அரசியல் நிலையில்லாமை.... இதுவும் கடந்து போகும் என்ற தத்துவத்தைச் சொல்லியபடி அவற்றையும் தாண்டி பயணத்தைத் தொடர்கிறோம்.
அதுதான் இந்தியாவின் சிறப்பம்சம்.

கடுமையான சூழலில் வளரும் ஒரு மனிதன் எந்தச் நெருக்கடியையும் சமாளிக்கும் அளவு தெளிவாக இருப்பான் அல்லவா... இந்தியப் பொருளாதாரமும் அப்படி ஒரு நிலைக்கு வரும் என்பதுதான் 2020-ல் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியபோது டாக்டர் கலாமின் எதிர்பார்ப்பாக இருந்தது.

‘வெறும் கனவல்ல நான் காண்பது... இந்தியாவின் வரலாற்றைப் படித்தவன். சுதந்திரத்துக்குப் பிந்தைய 60 ஆண்டுகளை முழுமையாக உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இந்தியா வல்லரசாவது 2020-ல் நிச்சயம் நடக்கும்’, என்கிறார் கலாம் இப்போதும் அதே உறுதியுடன்.

ஆனாலும் நம்மை நாமே பல விஷயங்களில் வென்று வரவேண்டிய கட்டாய சூழல் இன்றைக்கு. கலாமின் கனவு நிறைவேறும் முன் நாம் நிச்சயமாக வெல்ல வேண்டிய தீய சக்திகள் இவைதான்...
பல பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் இந்தியாவில் குவிகிறது. 2000 புள்ளிகளுக்குள்ளேயே நொண்டியடித்துக் கொண்டிருந்த பங்குச் சந்தை 15000 புள்ளிகளைத் தாண்டிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இன்னொரு பக்கம் வறுமை வாட்டுகிறது.

ஐடி, எஞ்சினியரிங் பட்டதாரிகள் மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க, அரசு கலைக் கல்லூரிகளில் படித்தவர்கள் சம்பளம் 3000 ரூபாயைத் தாண்ட யோசிக்கிறது.
3.5 கோடி பேர் நல்ல சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள், 350 மில்லின் மக்கள் இன்னும் வறுமையில் கிடக்கிறார்கள். 23 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் இந்தியா என்ற தேசம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, பாழ்பட்டுக் கிடந்திருக்கலாம். ஆனால் இந்த வார்த்தையைச் சொன்ன பாரதிக்குப் பின் வந்த காலத்தில் கல்வியில் தாழ்வுற்ற நிலையிலிருந்து மீண்டிருக்கிறோம்.
இன்று நம் அறிவுக் கண்கள் திறந்தேயிருக்கின்றன. ஆனால் தெரிந்தே மூடத்தனத்தை ஆராதிக்கும் போக்கு... அதிலிருந்து விடுபடுவது மிக முக்கியம்.
இந்தியன் என்று சொல்லிக் கொள்ளும்போதே நாடி நரம்புகள் முறுக்கேறி உணர்ச்சி வசப்படுவதெல்லாம் சரிதான்... ஆனால் பக்கத்து மாநிலத்துக்காரனுக்குத் தண்ணீர் தரவேண்டுமென்றதும் பஸ்களையும் அப்பாவிகளையும் கொளுத்தும் பிற்போக்குத் தனத்தை எப்போது விடப் போகிறோம்?
கல்வி வேலை வாய்ப்புகளில், தமக்குக் கீழே உள்ள சக இந்தியன் ஒருவன் மேலேறி வரட்டும் என பரந்த மனப்பான்மையோடு எப்போது கைகொடுக்கப் போகிறோம்? அல்லது அப்படிக் கைகொடுக்கும் அரசின் முயற்சிகளை எப்போது முடக்காமல் இருக்கப் போகிறோம்?
அரசு நடப்பது லாப நஷ்டக் கணக்கு பார்க்க அல்ல... இது மக்கள் பணத்தில் நடக்கிற அரசு. பெட்ரோலியம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறபோது மக்களுக்காக மாநில அரசுகள் தங்கள் வரிகளைக் குறைத்து, பணவீக்கம் குறைய எப்போது உதவப் போகின்றன?
முதலில் இவற்றை வென்றால்தான் நாம் உலகப் பொருளாதாரத்தை நிஜமாகவே வென்றெடுக்க முடியும். அந்த வெற்றியையும் உணர, அனுபவிக்க முடியும்!
ஜெய்ஹிந்த்!

Monday, August 11, 2008

ஒலிம்பிக்: இந்தியாவின் முதல் தங்க மகனுக்கு பரிசுகள் குவிகின்றன!!


பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர்-ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தப் பதக்கம் 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்குக் கிடாத்த முதல் பதக்கம்மட்டுமல்ல, ஒலிம்பிக் தனி நபர் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கமும் கூட.

இவருக்கு அடுத்தபடியாக சீனாவின் கினான்-ஷு வெள்ளிப் பதக்கத்தையும், பின்லாந்து வீரர் ஹென்றி ஹக்கினென் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். எனினும், இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ககன் நரங், ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பைத் தவற விட்டார்.
இப்போட்டியின் 6வது சுற்றில் 9.917 புள்ளிகளுடன் இருந்த ககன் நரங், அடுத்த சுற்றில் 98 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதில் மற்ற வீரர்கள் 99 அல்லது 100 புள்ளிகளை எடுத்ததால் ககன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுதிக்கான வாய்ப்பை இழந்தார்.
இந்தியாவுக்கு 9வது ஒலிம்பிக் தங்கம்:
கடந்த 1980ஆம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி, ஸ்பெயின் அணியை 4-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அப்பதக்கம் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 8வது தங்கப்பதக்கம்.
அந்த பதக்கம் வெல்லப்பட்டு 28 ஆண்டுகள் பின்னர் தற்போது அபினவ் பிந்த்ரா 9வது தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்காக வென்றுள்ளார்.
ஒரு கோடி பரிசு!
இந்தியாவுக்கு முதல் தனி நபர் தங்கம் வென்ற அப்நவ்வுக்கு பஞ்சாப் மாநில அரசு ரூ.1 கோடி பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.
இ‌ந்த வெ‌ற்‌றி‌யி‌ன் மூல‌ம் ஒ‌ட்டு மொ‌த்த இ‌ந்‌தியாவு‌க்கு‌ம் அ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ரா பெருமை சே‌ர்‌த்து‌ள்ளதாக பஞ்சாப் முதலமை‌ச்ச‌ர் ‌பிரகா‌ஷ் ‌சி‌ங் பாத‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதேபோ‌ல், அ‌ரியானா மா‌நில முதலமை‌ச்ச‌ர் பூ‌‌பிந்த‌ர் ‌சி‌ங் ஹூடா, ‌பி‌ந்‌த்ராவு‌க்கு ரூ.25 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்குவதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


Sunday, August 10, 2008

கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு!

பேரலுக்கு 120 டாலரானது கச்சா எண்ணெய்!
கச்சா எண்ணெயின் விலை மேலும் 4 டாலர்கள் குறைந்து பேரலுக்கு 120 டாலர் என்ற நிலைக்கு வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இந்த அளவு விலை குறைவது இதுவே முதல் முறை.
ஜூலை மத்தியில் 147 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கப் பொருளாதாரத்தின் இறங்குமுகம் மற்றும் அமெரிக்கர்களின் நுகர்வுக் குறைவு காரணமாக 27 டாலர்கள் குறைந்துள்ளது. இந்நிலை மேலும் தொடர்ந்தால் அடுத்த மூன்று வாரங்களில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலர்களுக்குள் வந்துவிடும் என்று வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பயமுறுத்தும் ஈரான்!
ஆனால் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைவதும், விண்ணைத் தொடுமளவுக்கு உயர்வதும் இப்போது ஈரானின் கையில் உள்ளதாக உலக நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. காரணம் தனது அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் சோதனை முயற்சிகளை இன்னமும் அந்நாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அணு ஆயுத சோதனையை ஈரான் நிறுத்திக் கொள்ள இந்த வார இறுதி வரை ஐநாவின் பாதிகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நிரந்த உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி போன்றவை கெடுவிதித்திருந்தன. ஆனால் அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை ஈரான். இதனால் அந்நாட்டின் மீது புதிய தடைகளை விதிக்கத் தயாராகிறது ஐ.நா. (அதாவது அமெரிக்காவும் இங்கிலாந்தும்!)

ஈரான் மீது போர்தொடுக்கும்படி ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளிப்படையாக அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஒருவேளை நிலைமை எல்லை மீறிப்போனால், ஹோர்மோஸ் (Hormoz) நீர் சந்திப்பை ஈரான் தகர்க்கும் அபாயமுள்ளது. இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்குத் தேவையான 40 சதவிகித கச்சா எண்ணெய் ஓபெக் (OPEC) நாடுகளிலிருந்து வந்தாக வேண்டும். ஈரானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த வழித்தடத்தை ஈரான் அடைத்துவிட்டாலோ அல்லது அந்த வழியாக வரும் டேங்கர் கப்பல்களைத் தகர்க்க ஆரம்பித்துவிட்டாலோ, எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிடும்.
எனவேதான் ஈரான் மீதான நடவடிக்கையை இன்னும் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகின்றன அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்!

இது ஆரோக்கியமல்ல! - ஒரு எச்சரிக்கை!!


டாக்டர் எஸ்.ஷங்கர்


பணவீக்கம்: கண்மூடித்தனமான பணக் கொள்கையும் ஆபத்தே!


அடுத்த ஆறு மாதங்களுக்குள் பணவீக்கத்தை 7 முதல் 5 சதவிகிதத்துக்குள் கொண்டு வரவே இந்த கடுமையான பணக்கொள்கையைக் கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம், என்ற அறிவிப்போடு சிஆர்ஆர், ரெபோ ரேட்டை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம், வங்கிகளுக்கு அளிக்கப்படும் ரொக்கத்துக்கான வட்டி விகிதம் இரண்டையுமே ரிசர்வ் வங்கி உயர்த்தியிருப்பதால் அடுத்து வரும் நாட்களில் வங்கிகள் வழங்கப்போகும் பல வகைக் கடன்களுக்கான வட்டிகளும் கணிசமாக உயர்த்தப்பட உள்ளன.

வீட்டுக் கடன், வணிக விரிவாக்கக் கடன்கள், புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கான கடன்கள், தனிநபர், நுகர்வோர் கடன்கள் அனைத்துக்குமே தற்போது வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தில் குறைந்தபட்சம் 3 சதவிகிதம் வரை வட்டியை உயர்த்த உள்ளதாக வணிக வங்கிகள் கூறுகின்றன.
இது ஒரு உத்தேசம்தான். இதைவிட இன்னும் கூடுதலாகக் கூட வட்டி விகிதங்கள் உயரக்கூடும்.
அதேநேரம் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் வைப்புத் தொகைகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதனால் வெளியில் புழக்கத்திலுள்ள பணத்தில் ரூ.8000 கோடி வரை அடுத்த ஒரு மாதத்திலேயே உறிஞ்சப்பட்டு விடும், பணவீக்கமும் இரட்டை இலக்கத்திலிருந்து ஒற்றை இலக்கத்துக்கு வந்துவிடும் என ரிசர்வ் வங்கி குறிப்பிடுகிறது.

எண்கள் Vs எண்ணங்கள்!!
இந்த நிலை தொடர்ந்தால் ஆண்டு இறுதிக்குள் ரூ.50000 கோடி வரை பணத்தை உறிஞ்சிவிட முடியும். பணப் புழக்கமும் குறையும், பணவீக்கமும் கட்டுக்குள் வரும். இது நடைமுறையில் சாத்தியம்தான் என்றாலும், நாட்டின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்காது என பொருளியல் நிபுணர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

Combined Economic Measure அதாவது பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சரிசமமான பன்முக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பிரயோகிப்பது மட்டும்தான் ஆரோக்கியமான பணவீக்கத்துக்கு வழிவகுக்கும், என்கிறார்கள்.

இதற்கு quantitative measures எனப்படும் சிஆர்ஆர், ரெபோ ஆயுதங்கள் மட்டும் போதாது. Qualitative measures எனப்படும் வேறு சில சிந்தனை சார்ந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் ஒரு சேரக் கையாளுதல் அவசியம்.
இதை இப்படி விளக்கலாம்...
எல்லா கடன்களுக்கும் கண்ணை மூடிக் கொண்டு வட்டி விகித்தை உயர்த்துவது quantitative என்றால், விவசாயம் மற்றும் அத்தியாவசிய முதலீடுகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தாமல் விடுவது qualitative. ஒன்று வெறும் எண்களைச் சார்ந்தது. அடுத்தது எண்ணங்கள் சார்ந்தது!

சிமெண்ட், இரும்பு, அலுமினியப் பொருட்களின் மீதான விலைகள் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றின் விலைகளில் மாறுதல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது நடைமுறைப் பொருளாதாரத்தை சீராக வைத்திருக்க உதவும். ஆனால் வெறும் பணக்கொள்கையை மட்டுமே பயன்படுத்தி இதைச் சாதிக்க முடியாது.

உணவுப் பொருள் உற்பத்தி சார்ந்த துறைகளில் சலுகைகளையும், வட்டித் தளர்வுகளையும் அனுமதிக்கத்தான் வேண்டும். பொருளாதாரம் ஒருவித சமநிலைத் தன்மையில் இருக்க இந்த பன்முக பொருளாதார நடவடிக்கைகள் உதவும்.பொருளியல் நிபுணர்கள் கருத்து 'உடல் வீங்கிப் போயிருக்கிறதே என்று ஒரேயடியாக கொழுப்பை உறிஞ்சிவிட்டால் என்னாகுமோ அப்படி ஒரு எதிர்மறை விளைவை கடுமையான சிஆர்ஆர், ரெபோ ரேட் உயர்வு தோற்றுவித்து விடக்கூடும்.

நமக்கு கடந்த காலங்களில் அப்படிப்பட்ட நெருக்கடிகள் ஏற்படுத்தியுள்ளன. அதேநேரம் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாட்டுக் கருவிகளை தொடர்ந்து உபயோகிப்பது பணவாட்டத்துக்கும் வழி வகுத்துவிடும். இதுவும் நமக்கு கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது, என்கிறார் மாநிலக் கல்லூரியின் முன்னாள் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் பன்னீர்செல்வம்.
ஆனால் நமது நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியப் பொருளாதாரத்தை மேலும் ஒரு கடுமையான சூழலுக்கு இட்டுச் சென்று விடுமோ என்ற அச்சத்தைத் தோற்று வித்துள்ளதாகக் கூறுகிறார் பேராசிரியர் பன்னீர்செல்வம். அப்படி என்ன அறிக்கை அது?

அரசு வங்கிகள் இனி தாராளக் கடன் வழங்கும் போக்கைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கடன் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்' -இதுதான் சிதம்பரத்தின் அறிக்கை.

சுருக்கமாக, இனி கடன் தாராதீர்கள் என்ற கசப்பான சிக்னலை சர்க்கரை முலாம் தடவிய வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் அமைச்சர். கிராமப் புறங்களில் ஏற்கெனவே விவசாயிகள் மற்றும் உற்பத்தி சார் நடவடிக்கைகளுக்குக் கடன் பெறுவோர் அரசு வங்கிகளிடம் கடன் பெறுவதற்குள் விழி பிதுங்கிப் போகிறார்கள்.
நகர்ப் புறங்களில், செல்வாக்குள்ள நபர்கள் மட்டுமே அதிகக் கடன் வசதிகளை அனுபவிக்கின்றனர்.

பேராசிரியர் பன்னீர் செல்வம் பெரிதும் வலியுறுத்தும் இன்னொரு விஷயம் அரசை நடத்துபவர்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்களுக்கான செலவைக் கடுமையாகக் குறைக்க வேண்டுமென்பது.

"100 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தைத் துவக்கி வைக்க 10 கோடி ரூபாயில் ஆடம்பர விழா எதற்கு? இந்த 10 கோடிதான் பணவீக்கத்துக்கு அச்சாரமிடுகிறது. ஆனால் இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் நடந்து கொள்கின்றன.
நமது அமைச்சர்கள், அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு, தமிழ்நாட்டின் பட்ஜெட் தொகைக்குச் சமம்!
அதேபோல, நாட்டில் பொருளாதார நெருக்கடி எனத் தெரிந்தும் அரசு ஊழியர்களுக்கு எதற்காக மிக அதிக அளவு சம்பளத்தை உயர்த்துகிறார்கள். அந்த நிதிச் சுமையையும் சிஆர்ஆர் மூலம்தான் குறைக்கப் போகிறார்கள் என்றால் இந்த சம்பள உயர்வு மிகப் பெரிய கேலிக் கூத்தல்லவா...!" என்கிறார்.
கண்மூடித்தனமான பிரயோகம்!இப்போது வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு, கடன் வசதிகளும் முடக்கப்பட்டால், பாதிப்பு யாருக்கு? பொருளாதாரத்தின் அடிமட்டத் தூண்களான உணவு உற்பத்தியாளர்கள்தான்...

6 மாதங்களுக்குப் பிறகு பணவீக்கம் 7 சதவிகிதமாகி விட்டது என எண் கணக்கை ஒப்பிப்பதால் மட்டும் என்ன நன்மை வந்துவிடப் போகிறது. எனவே பணவியல் கொள்கைகளை கண்மூடித்தனமாக நம்புவதைக் குறைத்துக் கொண்டு, ஆரோக்கியமான பணவீக்க நிலை நிலவ, பன்முக பொருளாதார நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்!
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

பணவீக்கம்: சிஆர்ஆர், ரெபோ ரேட் அதிகபட்ச உயர்வு!

கிட்டத்தட்ட 12 சதவிகிதத்தைத் தொட்டுக் கொண்டு நிற்கும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் (சிஆர்ஆர்), வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தையும் (ரெபோ) இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய ரிசர்வ் வங்கி இன்று உயர்த்தியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை கணிசமாகக் குறைத்து 5 சதவிகித அளவுக்குக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விகிதங்களின்படி ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி அதாவது ரெபோ ரேட் விகிதம் இனி 50 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, 8.5-லிருந்து 9 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வங்கியும் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பின் அளவு அதாவது சிஆர்ஆர் இதுவரை 50 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வந்தது. ஆகஸ்ட் 30 முதல் அது 25 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு 8.75லிருந்து 9 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. அதேநேரம் வெளியிலிருந்து ரிசர்வ் வங்கி பெறும் ரொக்கத்துக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் (RRR – REVERSE REPO RATE) எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை.
வழக்கம்போல 6 சதவிகிதம்தான் இனிமேலும் தரப்படும். அதேபோல வங்கி விகிதமும் (BANK RATE - நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நீண்ட காலக் கடன்கள்) மாறாமல் அதே 6 சதவிகிதத்தில் நிலைத்திருக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்க அளவை 7 முதல் 5.5 சதவிகிதத்துக்குள் கொண்டு வந்துவிட வேண்டும், அதே நேரம் நாட்டின் மொத்த உற்பத்தியை 8 சதவிகித அளவில் நிலைபெறச்செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டுதான் சிஆர்ஆர் மற்றும் ரெபோ ரேட் அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இனி வங்கிகள் வழங்கும் அனைத்துக் கடன்களுக்கான வட்டி விகிதங்களும் கணிசமாக உயர்த்தப்படவுள்ளன.

சற்றே 'வற்றிய' வீக்கம்: சிஆர்ஆர் மேலும் உயர்கிறது?


தொடர்ந்து வீங்கிக் கொண்டே போன இந்தியப் பொருளாதாரம் சற்றே வற்றத் தொடங்கியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை மேலும் உயர்த்தும் யோசனையில் உள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. எல்லாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் பெற்ற வெற்றியின் விளைவு என்று கூடச் சொல்லலாம்.
ஆனால் பணவீக்கம் ரொம்பக் குறைந்துவிட்டதாக சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டாம். 11.91 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் இந்த இரண்டு நாட்களில் 0.02 சதவிகிதம் அளவுக்குக் குறைந்து 11.89 சதவிகிதத்துக்கு வந்திருக்கிறது.

நாட்டில் அரசின் நிலைத் தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள், உணவு தானியங்கள், உணவு எண்ணெய், காய்கறிகள் மற்றும் பால் பொருட்களின் விலை நிலையில் இந்த வாரம் நிலையான போக்கு ஏற்பட்டுள்ளது.
வியாழனன்று வெளியிடப்பட்ட (இனி ஒவ்வொரு வியாழனன்றும் பணவீக்க நிலவரத்தை அரசு வெளியிட உள்ளது) மொத்த விலைக் குறியீட்டெண் (WPI) கணக்கீட்டின்படி, கடந்த வாரத்தில் உணவுப் பொருட்களின் விலையில் சராசரியாக 0.6 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
ஆனால் காபி மற்றும் அதன் உப பொருட்களின் விலை மட்டும் 0.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மின்சாரம், எரிபொருள்களின் விலைநிலையில் எந்த மாறுதலும் இல்லாததால், மற்ற பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள லேசான உயர்வு பெரிதாக விலைக் குறியீட்டெண்ணைப் பாதிக்கவில்லை. பெரிய அளவு மாற்றமிருக்காது!

எதிர்வரும் நாட்களில் பணவீக்கத்தின் நிலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதா, பொருளாதாரம் மேம்படுமா?இந்தக் கேள்விகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒய்.வி.ரெட்டி இப்படி பதிலளிக்கிறார்:
இப்போது உலகப் பொருளாதாரமே, ஒருவித மந்த நிலையில் உள்ளது. இது இன்ஃபிளேஷனுமில்லை, டீஃபிளேஷனுமில்லை. ஸ்டேக்ஃப்ளேஷன். (பணவீக்கமும் இல்லை, பண மந்தமுமில்லை, பணவீக்க மந்தம்) அதாவது அதிகபட்ச பணவீக்கம், மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி.
அதனால் ஏற்பட்டுள்ள தேக்கம்தான் இன்றைய சர்வதேசப் பொருளாதார நிலை. இதுதான் இன்று உலகின் பல நாடுகளையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் பிரச்சினையும் இதுதான். ஆனால் இவற்றிலிருந்து வேறுபட்டது இந்தியாவின் பிரச்சினை. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நிலை நாம் எவ்வளவோ மேல்!, என்கிறார் ரெட்டி.

பணவீக்கத்தின் அளவை இன்னும் கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவர மேலும் 0.50 சதவிகிதம் அளவுக்கு ரொக்க இருப்பு விகிதம் (சிஆர்ஆர்) மற்றும் ரெபோ ரேட் விகிதத்தைக் கூட்டக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வீக்கம் எப்போது குறையும் - 2

டாக்டர் எஸ்.ஷங்கர்


சீனாவின் அனுபவங்களிலிருந்து...

இந்தப் பகுதியைத் தொடருமுன் ஒரு ஷாக்கான சமாச்சரத்தை விளக்கிவிடுவது உத்தமம் என நினைக்கிறேன்.

கட்டுரையின் முதல் பகுதியில், சிஆர்ஆர் எந்த அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தேன். நமது நிதியமைச்சர் எந்த அளவு இதில் விளையாடியிருக்கிறார் என்ற உண்மையைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லாமல், உங்கள் ஊகத்துக்கே விட்டுவிட்டிருந்தேன்.

நண்பர்களும், எனது முன்னாள் வகுப்புத் தோழர்களாக இருந்து இப்போது மாநிலக் கல்லூரியின் பொருளாதாரத் துறையில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் சிலரும் தொலைபேசியில் வலியுறுத்தியதால் அந்த ஒரு விஷயத்தை மட்டும் சற்றே விளக்கிவிட்டு, அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவோம்...

ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிப்பது, மற்றும் நேற்றைய, நாளைய கடன்கள் மீதான வட்டியை அதிகரிப்பது மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முழுமையான கருவியாகிவிடாது. ஆனால் நம் நிதி மந்திரி அதைத்தான் முழுமையாக நம்புகிறார்.

சிஆர்ஆரை ஏதோ இப்போதுதான் உயர்த்தியிருப்பது போல நமக்குத் தெரிகிறது. ஆனால் கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்றே ப.சிதம்பரம் இதுகுறித்த லேசாக கோடி காட்டிவிட்டார்.

அன்றைய தேதியில் ரிசர்வ் வங்கியின் சிஆர்ஆர் 7.5 சதவிகிதம். இப்போது 8.5. ஜூலைக்குள் இது 8.75! எவ்வளவு உயர்ந்திருக்கிறது... கிட்டத்தட்ட 1.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் .75 சதவிகிதம் மக்களுக்குத் தெரியாமலேயே அல்லது அதிக ஆர்ப்பாட்டமின்றி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஆபத்து.

அதாவது நிதியமைச்சர் ஜூன் 17-ம் தேதி பாராளுமன்றத்தில் சின்னதாக ஒரு அறிவிப்பு கொடுத்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் 0.5 சதவிகிதம் சிஆர்ஆர் உயர்த்தப்பட்டுள்ளது!இதன் விளைவு இன்னும் சில தினங்களிலேயே தெரியத் தொடங்கும். என்னப்பா, 500, 1000 ரூபாய் நோட்டுக்களைக் கண்ணுல பார்க்கவே முடியலையே என்பது போன்ற முணுமுணுப்புகள் கிளம்ப ஆரம்பித்துவிடும்.

சிஆர்ஆரை உயர்த்திக் கொண்டே போனால், அதன் முடிவு?இப்போது பணவீக்கம் மாதிரி, அடுத்து பணத்தேக்கம் வந்துவிடும். நாட்டின் மொத்தப் பண சுழற்சியும் சுருக்கப்பட்டு பணம் மொத்தமும் ரிசர்வ் வங்கியில் தேங்கிப் போக பொருளாதாரம் முடங்கிப் போகும். அப்போதும் பாதிக்கப்படப் போவது நடுத்தர, ஏழை மக்கள்தான். பணக்காரர்கள் சமாளித்துக் கொள்ளலாம்.

சரி, என்னதான் செய்ய வேண்டும்?

நோஞ்சானாக இருப்பதும் ஆபத்து, வீங்கி வெடித்துப் போகும் அளவுக்குப் பருமனாக இருப்பதும் ஆபத்து. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உடலை வைத்துக் கொள்வதே ஆரோக்கியம் என்பது போலத்தான், பண வீக்கத்துக்கு எதிரான பொருளாதா நடவடிக்கைகளும் அமைய வேண்டும் என்கிறார் நவீன பொருளியலின் தந்தை எனப்படும் ஜான் மேனார்டு கீன்ஸ்.

எத்தனை அனுபவப் பூர்வமான நிஜம் கலந்த வாக்கு பாருங்கள்...

ஆனால் பொருளியலில் பிஎச்டி வாங்கிய நமது பிரதமரும் அவரது விசுவாச உதவியாளராக தன்னைக் காட்டிக் கொள்வதிலேயே குறியாகத் திகழும் ப.சிதம்பரமும் இதனை கவனத்தில் கொண்டதாகவே தெரியவில்லை.

சீனா- ஒரு அருகாமை உதாரணம்.

குறைந்தபட்சம், பொருளியல் கோட்பாடுகளை திறமையாக, மக்களின் நலனுக்கேற்ப 'அப்ளை' செய்வதில்தான் ஒரு அரசின் நிஜமான வெற்றி இருக்கிறது என்கிறார் சீன அதிபர் ஹூ ஜின்டாவ். இந்த வார்த்தையைச் சொல்ல வேண்டுமென்றால் அதற்கான அடிப்படைத் தகுதி வேண்டுமல்லவா...

இதோ சீனா என்னவெல்லாம் செய்து தன் பணவீக்கத்தைக் குறைத்தது என்பதைப் பார்ப்போம்... (சீனப் புகழ் பாடுவதல்ல நமது நோக்கம். ஒரு நாட்டின் பொருளியல் அனுபவங்களே அடுத்த நாட்டுக்குப் பாடமாகின்றன...)

அது இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த காலம்...போரில் இரு துருவமாக நின்ற நேச நாடுகள் பெரும் வெற்றிப் பெற்று, போருக்குக் காரணமான ஹிட்லர் தலையிலான அச்சு நாடுகளை உலக வரைபடத்திலிருந்தே நீக்கிவிடும் வேகத்தோடு பல தடைகளை ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீது விதித்தன.

குறிப்பாக ஜெர்மனி மீதுதான் அதிகத் தடைகள். அதன் இயற்கை வளங்களைக் கூட அந்நாட்டில் விட்டு வைக்க மாட்டோம் என கொக்கரித்து, நிலக்கரிச் சுரங்கங்களை ஒரு நாடும், தங்க வயல்களை ஒரு நாடும், மற்ற கனிமங்களை ஒரு நாடும் பெர்லினில் அமர்ந்து கூறு போட்டுக் கொண்டன.

பெரும் பணவீக்கம் மட்டும்தான் ஜெர்மனி மக்களுக்கு மிஞ்சியது. அதுவும் எப்படிப்பட்ட பணவீக்கம் தெரியும்... நாமெல்லாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு கேல்லப்பிங் வீக்கம் (குதிரைப் பாய்ச்சல்). கையில் பணமென்ற பெயரில் நிறைய காகிதங்கள். ஆனால் எந்தப் பொருளையும் வாங்க முடியவில்லை. அடுப்பெரிக்க விறகாகவும், டாய்ட்டில் பயன்படுத்தும் காகிதங்களாகவும் மாறிப்போயின ஜெர்மன் கரன்ஸி டாயிட்சே மார்க்.

நாடு பழையபடி பண்டமாற்று முறைக்கு மாறிக் கொண்டிருந்தது. நீ கோதுமை கொடுத்தால் நான் உனக்கு ரொட்டி தருவேன் என்கிற அளவுக்குப் போய்விட்டது நிலைமை.

பெர்லின் நகரில் இரு அண்ணன் தம்பிகள். அதில் மூத்தவன் போருக்கு முன்பே சொத்துகளைப் பிரித்துக் கொண்டு தனியாகப் போய் விட்டான். இளையவன் மகா குடிகாரன். குடித்துக் குடித்து பணம் முழுவதையும் காலி பாட்டில்களாக்கி வைத்திருந்தான்.

இந்தப் பெரும் பணவீக்கத்தின் போது எந்தப் பொருளையும் பணம் கொடுத்து வாங்க முடியாமல் ஜெர்மன்வாசிகள் துன்பத்திலிருக்க, இந்த குடிகாரத் தம்பி மட்டும் எப்போதும் போல சந்தோஷத்திலிருந்தான். தன்னிடமிருந்த காலி பாட்டிலகளைக் கொடுத்துவிட்டு ஃபுல் பாட்டில் வாங்கிக் குடித்து தன் சந்தோஷத்தைத் தொடர்ந்தானாம் (நன்றி – பேராசிரியர் டாக்டர் முகமது இஸ்மாயில்).

அந்த அளவு மோசமாக இருந்த ஜெர்மனியின் பணவீக்கம் அடுத்த சில ஆண்டுகளில் சீர்ப்பட்டது. எப்படி... கம்பைன்டு எகனாமிகல் மெஷர் எனப்படும் கூட்டுப் பொருளாதார நடவடிக்கைதான் காரணம்.

ஒரு நாட்டின் பொருளாதார அனுபவம்தான் அடுத்த நாட்டுக்கான பாடம்... இந்த முறை சீனா கையிலெடுத்த ஆயுதமும் இதே கூட்டுப் பொருளாதார நடவடிக்கையைத்தான். நாற்பதுகளில் ஜெர்மனி தன் துயரிலிருந்து மீள என்னென்ன செய்தார்களோ அதைத்தான் சீனா இப்போது செய்தது, செய்து கொண்டிருக்கிறது.

சீனாவின் பணவீக்கம் ஒரு கட்டத்தில் எப்போதுமில்லாத புதிய உயரத்தைத் தொட்டதை நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இதிலிருந்து தப்பிக்க, முதல் நடவடிக்கையாக, சிஆர்ஆரைத்தான் உயர்த்தியது சீனாவின் மக்கள் வங்கி (இங்கே ரிசர்வ் வங்கி மாதிரி).

ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இதை உயர்த்தவில்லை.

நுகர்வோர் கடன்களை முடக்கி வைத்தது. ஆனால் அதே நுகர்வோர் உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளுக்குக் கேட்ட கடன்களை பழைய வட்டி விகிதத்திலேயே கொடுத்தது!

புதிய, அவசியமான கட்டடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு கடன் அளித்த்து, பழைய கட்டடங்களின் விரிவாக்கத்துக்கு கடன் மறுத்தது.

ஒவ்வொரு பொருளின் உற்பத்திச் செலவும் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பதை வரையறுத்து உற்பத்தி நிறுவனங்களுக்குச் சொல்லிவிட்டது.

உதாரணம்: ஒரு செல்போனின் அடக்க விலை 1000 ரூபாய் என்றால் அதைப் பாதியாகக் குறைக்கச் சொன்னது அரசு. அது எப்படி முடியும்?

முடியும்... ஒரு பொபைல் போன் தயாரிக்க என்னென்ன மூலப் பொருட்கள் தேவை என்பதை ஆராய்ந்த ஒரு நிபுணர் குழு, பெரும்பகுதி செலவு பிடிப்பது ஆடம்பரத் தோற்றத்துக்காக வாங்கப்படும் மூலப் பொருட்கள்தான் என்பதைக் கண்டறிந்து அவற்றை நீக்கியது.

உற்பத்திச் செலவு குறைந்த அளவுக்கு, சந்தை விலையையும் குறைத்துவிட்டன நிறுவனங்கள்.

மக்களின் வாங்கும் சக்திக்கேற்ற விலைக்கே பொருட்கள் கிடைக்க ஆரம்பித்தன. இதே போல கட்டுமானத் துறையில், மூலப் பொருள்கள் உபயோகப் படுத்துவதில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியது மட்டுமல்ல, அப்படிச் செய்யப்படுகிறதா என்பதை ஒரு குழு வைத்துக் கண்காணித்தது.

இன்னொரு பக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஒரு நிலைக்குள் நிறுத்தி வைத்தது.

விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டன. வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, அது சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டது.

அரசு அதிகாரிகள், பெரும் அரசியல் பொறுப்பிலிருப்பவர்கள் அனைவருமே ஒரே மாதிரியான செலவு வரம்புக்குள் கொண்டு வரப்பட்டனர்.
ஏதோ, முதல்வன் படத்தில் அர்ஜூன் செய்த டிராமா சமாச்சாரங்கள் மாதிரி ஒரு ஃபீல் வருகிறதல்லவா... ஆனால் இது சத்தியமான உண்மை.

இன்னொரு பக்கம், உற்பத்தியல்லாத பிரிவினருக்கான வருவாயை நிலைப்படுத்துவதிலும் வெற்றி கண்டது சீனா.

நிரம்பிய ஏரியின் கரை உடையும் போது முன்பக்கம், பின்பக்கம் என அனைத்து பக்கமும் மணல் மூட்டைப் போட்டு உடைப்பச் சரிப்படுத்துவது போல...

இன்று நம் நாட்டின் ஆபத்தான வீக்கம் வற்ற வேண்டுமானால், சீனாவின் சுவடுகளைப் பின்பற்றுவதில் தவறில்லை. அங்கு பெயருக்குதான் கம்யூனிஸ அரசாங்கம். ராணுவ அளவிலேயே கம்யூனிஸ கட்டுப்பாடு நின்றுவிட்டது. பொருளாதாரம் முழுக்க மார்க்கெட் ஃபோர்ஸ் எனப்படும் டிமான்ட் - சப்ளை கைக்குப் போய்விட்டது.

ஆனால் எப்போதெல்லாம் அதை நிலைப்படுத்த வேண்டி வருகிறதோ அப்போது அரசின் தலையீடு முழுமையாக இருக்கிறது.

இரும்புத் திரை போட்ட நாடு என வர்ணிக்கப்பட்ட தொன்னூறுகளிலேயே சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் பொருளியல் துறைத் தலைவர் டாக்டர் நாகநாதன் (இன்றைய தமிழக திட்டக்குழு துணைத் தலைவர்), சொன்ன உண்மை இது.

பணவீக்கத்தில் நாடு தள்ளாட்ட நடைபோட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் அரசுக்கு வைக்கும் யோசனைகள் இதுதான்.


நன்றி.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கழகத்தில் பொருளியலில் பிஎச்டி பட்டம் பெற்றவர்)


நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

Saturday, August 9, 2008

இந்த 'வீக்கம்' எப்போது குறையும்?

டாக்டர் எஸ்.ஷங்கர்

விண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்டாவியுடன் சேர்த்து தூக்கம் கண்களைச் சுழற்றும்.

அத்தனைச் சிக்கல் கொண்ட வறட்டுச் சமாச்சாரம்தான், ஆனால் அலுத்துக் கொள்ளாமல் தொடருங்கள்.

காரணம் இதில்தான் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையும் இருக்கு!

எப்போதெல்லாம் நாட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கிறதோ அப்போது விலைகள் கட்டுக்கடங்காமல் போகும். அதிகரிக்கும் பணப் புழக்கத்துக்கேற்ப நாட்டில் பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு (production and supply) இல்லாத நிலையில் பொருட்களின் விலை ஒன்றுக்குப் பத்து மடங்காகிறது. இதைத்தான் பணவீக்கம் என்கிறோம்.

பங்குகள் மீதான யூக வாணிபம், குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வது, அதன் தொடர்ச்சியாக மற்ற பொருட்களின் விலை உயர்வது எல்லாமே இந்த அளிப்புக்கும் தேவைக்கும் இடையே ஏற்படும் இடைவெளியைப் பெரிதாக்கி பணவீக்கத்தை வெடிக்குமளவுக்குக் கொண்டு போய்விடுகின்றன.

இந்தியாவில் ஏற்கெனவே 7.14 சதவிகிதம் வரை இருந்த பணவீக்க அளவை, பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றியதன் மூலம் மட்டுமே மேலும் 3 சதவிகிதம் உயர்த்தியது மாதிரி!

இது ஒரு எளிய விளக்கம். இதற்கு மார்ஷல்ஸ், கீன்ஸ், மார்க்ஸ் என பல்வேறு அறிஞர்களின் விளக்கங்களுக்குப் போனால் விடிந்துவிடும். அதனால் அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவோம்.

எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

விர்ரென்று ஏறிக் கொண்டேயிருக்கும் பணவீக்கத்தைக் கொஞ்சமாவது கட்டுக்குள் கொண்டுவர, மத்திய ரிசர்வ் வங்கிதான் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அரசின் பணக் கொள்கைகளை வகுப்பதும் நேரம் பார்த்து திறம்பட செயல்படுத்துவம் ரிசர்வ் வங்கியின் கையில்தான் உள்ளது.

ஆனால் அந்த ரிசர்வ் வங்கியிலும் அரசியல் விளையாடிய ஆட்டம் இருக்கிறதே... வெளியே சொன்னால் கேவலம். சி.ரங்கராஜன் கவர்னராக இருந்த காலம் வரை ரிசர்வ் வங்கிக்கு தெளிவான பணவியல் கொள்கைகளை நமது அரசு வகுத்துக் கொடுக்கவே இல்லை அல்லது வகுத்துக் கொள்ள விடவும் இல்லை என்பதை வெளியில் சொன்னால் வெட்கக் கேடு!

இதைப் பின்னாளில் அவரே ஒரு புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

விஷயத்துக்கு வருவோம்...

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் உள்ள முதல் ஆயுதம் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆரை அதிகரிப்பது.

இந்த ஆயுதத்தைத்தான் இப்போது கையிலெடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. அது என்ன ரொக்க இருப்பு விகிதம்? ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒவ்வொரு வணிக வங்கியும் குறிப்பிட்ட அளவு ரொக்கத்தை ரிசர்வ் வங்கியில் இருப்பாக வைத்துக் கொண்டுதான் தனது வர்த்தகத்தைக் கையாள வேண்டும்.

அதைத்தான் ரொக்க இருப்பு விகிதம் என்கிறார்கள்.

அரசின் பணவியல் கொள்கையில் இதற்கு மிக முக்கிய இடம் உண்டு. பணப் புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும், வங்கிகள் அளிக்கும் கடன்களைக் கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த நடவடிக்கை உதவும். இந்த ரொக்க இருப்பு விகிதத்தை ஆண்டுக்காண்டு பொருளாதார நிலைமைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் அதிகாரம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சொல்லப்போனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு வசமுள்ள ஒரே சட்டப்பூர்வ ஆயுதம் இந்த ரொக்க இருப்பு விகித கட்டுப்பாடுதான்.

எவ்வளவு உயர்த்தலாம்?

அதற்காக வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி ஒரேயடியாக உயர்த்திவிட முடியாது.

உதாரணம்: ஒரு வங்கி ரூ.20000 கோடி வரை வர்த்தகத்தைக் கையாளுவதாகக் கொள்வோம். அதில் 1800 கோடி வரை ரிசர்வ் வங்கியில் ரொக்க இருப்பு வைத்திருக்க வேண்டும்.

ஒரு வேளை, திடீரென பணவீக்கம் அதிகரிக்கும் போது, ரிசர்வ் வங்கி இந்த ரொக்க இருப்பை 2300 கோடியாக அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது வங்கி மூலம் வெளியில் செல்லும் பணத்தில் ரூ.500 கோடி வரை கட்டுப் படுத்தப்படுகிறது.

ஒரு வங்கி மூலம் மட்டுமே இந்த அளவு பணம் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் (கிளைகள் அல்ல) மூலமும் கட்டுப்படுத்தப்படும் பணத்தின் அளவு எவ்வளவு பாருங்கள்...

இப்போது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?

மத்திய ரிசர்வ் வங்கி இம்முறை முன்தேதியிட்டு 8.75 சதவிகிதமாக சிஆர்ஆரை உயர்த்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 26 முதல் 5 கட்டங்களாக புதிய சிஆர்ஆர் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

ஏப்ரல் 26 முதல் மே 10 வரையிலான 15 நாட்களுக்கு 0.25 சதவிகிதம், மே-11 முதல் 25-ம் தேதி வரையுள்ள காலகட்டத்துக்கு 0.25 சதவிகிதம் என இரண்டரை மாதங்களுக்கு மொத்தம் 1.25 சதவிகித அளவுக்கு ரொக்க இருப்பு விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 7.5 சதவிகிதத்திலிருந்து 8.75 சதவிகிதமாக சிஆர்ஆர் உயர்கிறது.

பொதுவாக இம்மாதிரி நேரங்களில் மத்திய அரசு இன்னொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். அது பொருட்களின் உற்பத்தியையும், அளிப்பையும் அதிகரிப்பது மற்றும் அநாவசியச் செலவுகளைக் குறைப்பது. ஆனால் நமது அரசியல்வாதிகள் அதற்கு எந்த அளவு ஒத்துவருவார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே.

இந்திய அரசால் இப்போதைக்கு உற்பத்தியை அதிகரிக்க முடியாது. பணப் புழக்கத்தின் அளவை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். அதற்கு தோதான ஆயுதம்தான் வங்கிகள் மூலம் தாராளமாகப் பணம் பாய்வதைத் தடுத்து நிறுத்துவது.

சரி, இந்த ரொக்கத்தைக் கட்டுப்படுத்திவிட்டால் பொருளின் விலை குறைந்து விடுமா...?

குறைய வேண்டும் என்பது பொருளாதார விதி. ஆனால் சத்தியமாகக் குறையாது என்பது நடைமுறை!பின்னே பணவீக்கம் எப்படிக் கட்டுக்குள் வரும்?பொதுமக்களின் வாங்கும் சக்தியைக் கணிசமாகக் குறைப்பதன் மூலமும் விலையைக் குறைக்க முடியுமல்லவா...

ரிசர்வ் வங்கி, ரொக்க இருப்பை அதிகரித்தால் வங்கிகள் தங்கள் பங்குக்கு, வட்டி விகிதத்தை தாறுமாறாக உயர்த்தும். வீட்டுக் கடன்கள், நுகர்வோர் கடன்கள் போன்றவற்றுக்கான முன்னுரிமை குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும். அல்லது, உயர்ந்துவிட்ட வட்டியைப் பார்த்து நாமாகவே கடன் வாங்குவதைக் குறைத்துக் கொள்வோம்.

இன்றைக்கு மாதச் சம்பளக்காரர்களின் வீடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் எல்லாம் சம்பளப் பணத்தில் மட்டுமே வாங்கியவையென்று கூற முடியுமா... பல்வேறு நுகர்வுக் கடன்கள்தானே வண்ணமிகு பயன்பாட்டுப் பொருட்களாக வந்திறங்குகின்றன.

இந்த கடன் வசதி நின்று போனால் தானாகவே வாங்கும் சக்தியும் நின்றுபோகும் அல்லவா... அப்போது பொருட்களின் அளிப்பு, வெளியில் புழங்கும் பணத்தின் அளவுக்கேற்ப சமநிலைப்படும். விலையும் ஒரு கட்டுக்குள் வரும்.

இருப்பவர் வாங்குவார். இல்லாதவர் அதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி காலத்தை ஓட்டுவார்.

யாருக்கு பாதிப்பு?

மைக்ரோசாஃப்ட், இன்ஃபோஸிஸ், எச்சிஎல் போன்ற பெரும் பணக்கார ஐடி நிறுவன ஊழியர்களை இந்தப் பண வீக்கமோ, பணமந்தமோ அல்லது வங்கிகள் உயர்த்தப் போகும் வட்டி விகிதமோ ஒன்றும் செய்து விடாது.

சொல்லப்போனால் இந்தப் பண வீக்கத்தைக் காரணம் காட்டி அவர்களுக்கு மேலும் 20 முதல் 40 சதவிகிதம் வரை சம்பள உயர்வு கிடைத்துவிடும். ஆனால் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நிலைதான் படு பாதாளத்துக்குப் போகும்.

உற்பத்தியாளன் என்று சொல்லப்படும் அடித்தட்டு வர்க்கம் தன் தேவையைச் சுருக்கிக் கொள்ளும் அவலமும், 23 வயது ஒயிட் காலர் ஐடி இளைஞர்கள் ஆயிரங்களை அள்ளி இறைத்து தங்களுக்கு வேண்டியதை அனுபவிக்கும் போக்கும் அதிகரிக்கும்.

பொருளாதார- சமூகக் குற்றங்கள் பெருகவும் அது வழிவகுக்கும். பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிப்பது ஒரு வகை முதலுதவி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்...

ஆனால் இதுவே நிரந்தரத் தீர்வல்ல.

நிரந்தரத் தீர்வு நிறைய இருக்கு... இந்தியாவிலாவது 11.05 சதவிகிதம். சீனாவில் ஒருகட்டத்தில் பணவீக்கத்தின் அளவு மிக மிக அதிகம், அதாவது 15 சதவிகிதம். ஆனால் அவர்களது பொருளாதாரம் சரிந்து விழுந்து விடவில்லை. கடந்த ஜனவரி மாதம் விண்ணுக்குப் போன விலைகள் இன்று மெல்ல தரையைத் தொடும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

அது எப்படி... அடுத்த பகுதியில்...!

நன்றி- தட்ஸ்தமிழ்